கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை குடும்பத்தினரே படுகொலை செய்த கொடூரம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காவனிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரா ரெட்டி (42). இவரது மகள் பிரியா ரெட்டி (17) தனியார் கல்லூரியில் பியூசி படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியில் பிரியா ரெட்டிக்கும், அவருடன் படித்த தலித் இளைஞர் ஒருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் தந்தை பைரா ரெட்டி, பிரியா ரெட்டியை கண்டித்துள்ளார். ஆனால், பிரியா ரெட்டி தொடர்ந்து தனது காதலரை சந்தித்து காதலித்து வந்தாராம். இதனால், பிரியா ரெட்டியை அவரது தந்தை துன்புறுத்தியுள்ளார். ஆனாலும் பிரியா ரெட்டி காதலை மறக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பைரா ரெட்டி திருப்பதிக்கு செல்வதாக கூறி குடும்பத்தினர் அனைவரையும் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் குடும்பத்துடன் திருப்பதி செல்லவில்லை, மாறாக. கோலாரை அடுத்துள்ள தம்டம் பள்ளி கிராமத்தில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டில் காரை நிறுத்தினார்.
பின்னர், காதலை மறக்குமாறு பிரியா ரெட்டியை அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர். இதற்கு மறுத்த பிரியா ரெட்டியை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரன் இணைந்து அடித்தே கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்டை வீட்டார் போலீஸாரில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரியா ரெட்டியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது மனைவி, மகனுடன் இணைந்து பிரியா ரெட்டியை கொலை செய்ததாக பைரா ரெட்டி ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பாக பையா ரெட்டி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications