பிற மாநிலங்களில் பா.ஜ.க.தோற்காது.. ஏன்?: விளக்குகிறார் 'ஆம் ஆத்மி' யோகேந்திர யாதவ்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்ட காரணத்திலேயே நிச்சயமாக பாரதிய ஜனதா தோற்றுவிடாது...டெல்லி அரசியல் சூழல், வாக்காளர்களும் பிற மாநிலங்களின் சூழலும் வெவ்வேறானவை என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
இவர் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிக்கும் மிகப் பிரபலமான கருத்துக் கணிப்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 ஐ கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார சாதனை படைத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா 3 தொகுதிகளையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கூட பெறவில்லை.

இது தொடர்பாக என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் யோகேந்திர குமார் யாதவ் கூறியதாவது:
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவை வைத்து மோடிக்கான ஆதரவு பீகாரிலோ, உத்தரப்பிரதேசத்திலோ இல்லை என்று கூறிவிட முடியாது. பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் பாரதிய ஜனதா தோற்றுவிடும் என்ற கருத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை.
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள். டெல்லியில் வீட்டுக்கு வீடு சென்று சந்தித்து மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்திரவாதத்தை அளித்து களப்பணியாற்றி இருந்தோம்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதும் எந்தளவு மிக மோசமாக விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியினரும் விமர்சனம் செய்தனர். நாங்கள் இதற்கு பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. இது எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
டெல்லியைப் பொறுத்தவரை இது ஒரு பெருநகரம். கணிசமான மத்திய தர வாக்காளர்கள் உள்ள மாநிலம். இதே சூழ்நிலை பிற மாநிலங்களில் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியினர் இந்துத்துவா கொள்கையை மிகத் தீவிரமாக பேசினர்..ஆனால் இதை டெல்லி வாக்காளர்கள் ஏற்கவில்லை.
டெல்லியின் சாதாரண வாக்காளர் ஒருவரும் மேற்கு வங்கம் அல்லது பீகாரின் வாக்காளரும் ஒரே மாதிரியானவர் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு மாற்றான அரசியல் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்துகிற சக்திகளாகத்தான் இருக்கின்றன.
உதாரணமாக மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலமாக்குவதை மமதா பானர்ஜி தடுத்துவிடவில்லை. சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜாதி, மதம் என குறிப்பிட்ட குறுகிய வரையறை கொண்ட கட்சிகளாக இருக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸைப் போல ஆம் ஆத்மி கட்சி எந்த ஊழல் புகார்களிலும் சிக்கிக் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறியிருந்தார்.
டெல்லி தேர்தலில் வென்றதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications