மோடி! உங்களால் என்னை அமைதியாக்க முடியாது- கர்ஜிக்கும் யோகேந்திர யாதவ்
மோடி உங்களால் என்னை அமைதியாக்க முடியாது என்று யோகேந்திர யாதவ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: ஸ்வராஜ் அபியான் தலைவரும் ஜெய் கிசான் அந்தோலன் கட்சியின் நிறுவனருமான யோகேந்திர யாதவ், மோடி அரசு தனது குடும்பத்தை குறி வைத்து தொந்தரவு கொடுத்துவருகிறது என்றும் மோடியால் தன்னை அமைதியாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவின் சகோதரி ரிவாரியில் நடத்தும் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து யோகேந்திர யாதவ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி அரசு தனது குடும்பத்தை குறிவைத்து செயல்படுவதாகவும், மதுவுக்கு எதிரான போராட்டத்தாலும், ரிவாரியில் நடந்த 9 நாள் விவசாயிகளின் பாதயாத்திரைக்குப் பின் 2 நாள் கழித்து ரிவாரியில் என்னுடைய சகோதரியின் மருத்துவமனையில் ஒரு பெரிய வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
என்னுடைய வீட்டில் சோதனை செய்யுங்கள். என்னுடைய குடும்பத்தினரை குறிவைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மோடி உங்களால் என்னை அமைதியாக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
வருமானவரித் துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி தீபேந்தர் எஸ் ஹூடா கண்டனம் தெரிவித்துள்ளார். யோகேந்திர யாதவ் மாற்றுக் கட்சிக்காரர்தான் ஆனால், ரிவாரியில் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி நல்ல விஷயங்களைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹூடா தெரிவித்துள்ளார்.