திறன் மேம்பாட்டில் புஃல் ஃபோக்கஸ்! இளைஞர்கள் நலனில் அசத்தும் யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச அரசு
லக்னோ: உத்தரப் பிரதேச பாஜக அரசு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் உள்ள 'லக்னோ பல்கலைக்கழகத்தில்' Samsung Innovation Campus எனும் பாடத்திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியாவின் முதன்மையான CSR திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களில் 383 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பட்டம் வழங்கி கௌரவித்தார்.

அப்போது சிறப்புரையாற்றிய அவர், "உத்தரப் பிரதேச பாஜக அரசு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "உலக அளவில் இந்தியாவில்தான் இளைஞர்கள் வளம் அதிகம். உத்தரப் பிரதேசத்திலும் இதே நிலைதான். இம்மாநிலத்தில் ஏறத்தாழ 56 சதவிகிதம் பேர் உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். எனவே இந்த சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டிய கடமை இந்த பாஜக அரசுக்கு இருக்கிறது.
எனவேதான் நாங்கள் செயற்கை நுண்ணறிவுக்கான திட்டங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிக் டேட்டா மற்றும் கோடிங் மற்றும் புரோகிராமிங் ஆகிய கற்றல் திட்டங்களை அறிவித்திருக்கிறோம். எங்கள் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறப்பான, வளமிக்க எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது எங்களின் கடமையாகும். அந்த வகையில் மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சாம்சாங் நிறுவனம் உறுதுணையாக இருந்து வருகிறது. சமீப காலங்களாக சாம்சாங் நிறுவனம் மாநில அரசின் சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது.
Samsung Innovation Campus எனும் பாடத்திட்டத்தை அந்நிறுவனம் முன்மொழிந்ததும் நாங்கள் ஏற்றுக்கொண்டது இதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும். ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரும் பலனை அளித்திருக்கிறது. இதன் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் ஏராளமான தொழிற்சாலைகளையும், இந்த தொழிற்சாலைகள் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இதனையடுத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பட்ஜெட்டில் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இது மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications