பெண்களுக்கு எதிரான புகார்கள் மீது அதிரடி நடவடிக்கை! உ.பி காவல்துறைக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: பெண்களுக்கு எதிராக பெறப்படும் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை மாநில காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு அதற்கான தீர்வையும் விரைவில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இக்குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் இதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்வது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது. பாதிக்கப்பட்ட நபருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த சிறப்பான நடவடிக்கை மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் உத்தரப் பிரதேச காவல்துறை தேசிய அளவில் 5வது இடத்தில் இருக்கிறது. பீகார், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க கடுமையான கால தாமதம் ஏற்படுகிறது. ஆனால் உ.பி அப்படியல்ல. நமது மாநிலத்தின் பதோஹி மாவட்ட காவல்துறையானது, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட காவல்துறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஷ்ரவஸ்தி, ஜான்சி மாவட்ட காவல்துறையும் இந்த குற்ற வழக்குளை கையாள்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் உ.பியின் நிலை வேறு மாதிரியாக இருந்தது. பெண்கள், சிறுமிகள் காணவில்லை என்றால் அது குறித்த புகாரை கூட காவல்துறையினர் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்நிலையை நாங்கள் மாற்றியுள்ளோம்.
பெண்களின் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, தொழிற் பயிற்சி, கடனுதவி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் பாஜக அரசுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications