ரூ. 5,000 இ.பி. பில் கட்டாததால் வாக்குவாதம் - தந்தையைக் குத்திக் கொன்ற 19 வயது மகன் கைது
டெல்லி: மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருந்ததைக் கண்டித்த தந்தையைக் குத்திக் கொன்ற மகனைப் டெல்லிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியைச் சேர்ந்த முட்டை வியாபாரி கோபால் (46). இவரது இளைய மகன் பிஜேந்தர் (19). கல்வியைப் பாதியில் கைவிட்ட பிஜேந்தர் வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.
இதனை அவ்வப்போது கண்டித்து வந்துள்ளார் கோபால். இந்நிலையில், பிதேந்தரை சமீபத்தில் ரூ. 5 ஆயிரம் மின்சாரக் கட்டணம் கட்டச் சொல்லியுள்ளார் கோபால். ஆனால், பிஜேந்தர் அதைக் கட்டவில்லை.
இது தொடர்பாக கடந்த ஞாயிறன்று இரவு தனது மகனைத் திட்டியுள்ளார் கோபால். வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் கோபாலின் மார்புப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார் பிஜேந்தர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கோபால் பலியானார்.
கணவரை மகன் கத்தியால் குத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபாலின் மனைவி இடையில் புகுந்து அதனைத் தடுக்க முயற்சித்துள்ளார். இதில், அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோபாலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தலையில் பலத்த காயமடைந்த கோபாலின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே தலைமறைவான பிஜேந்தரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications