கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் 14 பேரை சுட்டுக் கொன்ற 2 பேர்
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தில் நடந்த பார்ட்டியில் 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர், 17 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான் பெர்னார்டினோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மையம் ஒன்றில் புதன்கிழமை பார்ட்டி நடந்தது. காலை 11 மணி அளவில் கருப்பு நிற முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் ஒரு ஆணும், பெண்ணும் பார்ட்டி அறைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் அறைக்குள் நுழைந்த வேகத்தில் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு கருப்பு நிற எஸ்யுவி காரில் தப்பியோடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர், 17 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளின் காரை பின்தொடர்ந்தனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். சில மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் எஸ்யுவி காரில் இருந்த இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஓடிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அமெரிக்காவில் பிறந்து சான் பெர்னார்டினோ கவுன்டியில் சுற்றுச்சூழல் நிபுணராக இருந்த செய்யது ரிஸ்வான் பாரூக்(28), தஷ்ஃபீன் மாலிக்(27) என்பது தெரிய வந்துள்ளது. மாலிக் எங்கு பிறந்து வளர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications