10 லட்சம் பேருக்கு ‘எபோலா’ பாதிப்பு... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்
வாஷிங்டன்: எபோலா வைரஸால் மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா வைரஸ் காய்ச்சல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 1050ஐத் தாண்டியுள்ளது. எபோலோ நோய்த் தாக்குதலிலிருந்து தப்பிக்க நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் எபோலா வைரஸால் மேற்கு ஆப்பிரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் ஒத்துழைப்பு...
மேலும், எபோலா வைரஸ் அறிகுறியை அறிவதில் சிரமம் காரணமாகவே இந்நோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், அசாதாரண நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

2 நாட்களில்...
128 பேருக்கு புதிதாக இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 10, 11- ம் தேதிகளில் மட்டும் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில் இந்நோய்க்கு சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எபோலாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,975 ஆக உயர்ந்துள்ளது.

பலி...
இந்நோயால் பலியானோர் எண்ணிக்கை 1,069 ஆக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு...
இது தொடர்பாக ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் மார்கரெட் சான் பேசுகையில், "எபோலாவுக்கு 10 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை பெருவதில் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்," எனத் தெரிவித்துள்ளார்.

நோய் பரவும் அபாயம்...
மேலும், ‘பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்ற நாட்டினருக்கு நோய் பரவுக்கூடிய அபாயம் உள்ளது. நோய் தடுப்புக்கான வழிகளை உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நிலை தற்போது இல்லை. அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பதனால் மட்டுமே நோய் பரவுவதை தடுக்க இயலும். தற்போது கடுமையான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்...
தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளாவிட்டால், விரைவில் அதிக அளவிலான மனித இழப்புகளை ஏற்படுத்த நேரிடும். விமான நிலையங்களில் ஒவ்வொரு நாடுகளும் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நோய்த் தீவிரம்...
பாதிக்கப்பட்ட நாடுகளில் கிராமப்புரங்களில் நோய் தீவிரமடைந்து வருகிறது. அவர்களை மருத்துவக் குழுக்கள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. நகரங்களிலும் இந்த நிலையை காண முடிகிறது. மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். சுகாதாரத் துறையினர் கைக்கோர்க்க வேண்டும்.

கவலை...
மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத கவலையை ஏற்படுத்தியுள்ளது. எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த 170-க்கும் அதிகமான மருத்துவ அதிகாரிகளுக்கும் தொற்று ஏற்பட்டு விட்டது. இதுவரையில் 80 அதிகாரிகள் இறந்துள்ளனர்' என அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக...
இதற்கிடையே எபோலா வைரஸ் பரவலை தடுக்க புதிய தடுப்பு மருந்தை உலக சுகதார நிறுவனத்திடம் வழங்க உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 800 முதல் 1000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ள இந்தத் தடுப்பு மருந்து விலங்குகளிடம் மட்டும் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications