இஸ்ரேல் பகிரங்க வார்னிங்! மத்திய கிழக்கில் ஹை டென்ஷன்.. ஈரான் கைப்பற்றிய கப்பலில் 17 இந்தியர்கள்?
டெல் அவிவ்: ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கண்டெய்னர் கப்பலை ஈரான் கைப்பற்றியதற்கு இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடைய ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் பணியாற்றும் சிப்பந்திகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் பல மாதங்களாகத் தொடர்கிறது. இந்த மோதலுக்கே முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்டமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த வாரம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இதில் இருந்தே பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று கூறும் ஈரான், இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
திடீரென ஈரான் தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்க இஸ்ரேலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது பதிலடி நடவடிக்கையை ஆரம்பிக்கும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எச்சரித்துள்ளது. திடீரென நடக்கும் இந்தத் தாக்குதல் பிராந்திய போரைத் தொடங்கி வைக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேலை எச்சரித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், மறுபுறம் தாக்குதலை நடத்த வேண்டாம் என்று ஈரானையும் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கண்டெய்னர் கப்பலை ஈரானிய புரட்சி படை கைப்பற்றியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல், ஈரான் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரித்துள்ளது. இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில கப்பலில் 25 சிப்பந்திகள் இருப்பதாகவும் அதில் 17 சிப்பந்திகள் இந்தியர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே MSC Aries என்ற கண்டெய்னர் கப்பல், ஹெலிகாப்டர் நடவடிக்கை மூலமகாக கைப்பற்றப்பட்டு இருப்பதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் கட்டுக்குள் இருக்கும் சரக்கு கப்பலில் 17 இந்திய சிப்பந்திகள் இருப்பதாக இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரக வட்டாரங்கள் கூறியதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கப்பல் ஈரான் கட்டுப்பாட்டிற்குள் சென்று இருப்பதை கப்பல் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications