இந்தோனேசியாவில் இசை கிளப்பில் பயங்கர தீ: 17 பேர் பலி
ஜகார்தா: இந்தோனேசியாவின் சுலாவசி தீவில் இருக்கும் இசை கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவசி தீவின் தலைநகரான மானடோவில் செயல்பட்டு வருகிறது இனுல் விஸ்டா காரியோகி இசை கிளப். மூன்றடுக்கு மாடியில் உள்ள அந்த கிளப்பின் இரண்டாவது மாடியில் இன்று அதிகாலை 1 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது நூற்றுக்கணக்கானோர் அந்த கிளப்பில் பாடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.
மேலும் புகை மண்டலத்தில் சிக்கி பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்ட 71 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கிளப்பிற்கு வந்து போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று உறுதியாக தெரியவில்லை. விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கட்டிடத்தில் தீ பிடித்தவுடன் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.