ஜப்பானில் பயங்கரம்: மாற்றுத்திறனாளிகள் காப்பக்கத்தில் கத்திக்குத்து- 19 பேர் பலி, 26 பேர் காயம்
டோக்கியோ: ஜப்பானில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்குள் புகுந்த வாலிபர் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சகமிஹராவில் உள்ளது சுகூய் யமயுரி என் என்கிற மாற்றுத்திறனாளிகள் காப்பகம். அந்த காப்பகத்திற்குள் அதிகாலை 2.30 மணிக்கு புகுந்த 26 வயது வாலிபர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார்.

இதில் காப்பகத்தில் இருந்தவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர், 26 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பியோடிய வாலிபர் பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அதே காப்பகத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உலகில் மாற்றுத்திறனாளிகள் இருக்கக் கூடாது என்று இவ்வாறு செய்ததாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான கத்திக்குத்து சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2008ம் ஆண்டில் ஒருவர் டோக்கியோவின் அகிஹபாராவில் மக்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 7 பேர் பலியாகினர். ஜப்பானில் துப்பாக்கிகள் வாங்க கடும் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications