எகிப்தில் திடீரென பாய்ந்து வந்த குண்டுகள்! இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் 2 பேர் பலி.. பெரும் பதற்றம்!
அலெக்சாண்டரியா: இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட திடீர் ஏவுகணை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் முற்றியுள்ளது. இந்நிலையில், எகிப்தில் 2 இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல சண்டைகள், ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், நேற்று காஸா முனையில் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 5000 ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்து பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், காஸாவில் ஹமாஸ் ஆயுதப் படையினர் இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்று வைத்திருப்பதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது. இதிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இருதரப்பிலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையேயான போர் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எகிப்தில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள சுற்றுலா தளத்தில் ஒரு போலீஸ்காரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு எகிப்தியர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இஸ்ரேலிய சுற்றுலாக் குழு பயணித்த சுற்றுலா பேருந்து மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள செராபியம் என்ற பழங்கால ரோமானிய நினைவுச்சின்னம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை இஸ்ரேலின் ஜாகா மீட்பு சேவை உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான செய்திகளை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.
எகிப்திய அதிகாரிகள், குறிப்பாக உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி அப்பாஸ் கமெல், காஸா பகுதியுடனான தனது எல்லையை எகிப்து மூடிவிட்ட போதிலும், காஸாவில் உறவுகளை குளிர்விக்கும் முயற்சியில் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கிறார் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications