துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம்
மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் உள்ளூர் குழுக்கள் அடிக்கடி பிரச்னை செய்வதால் மீட்பு படையினர் தற்காலிகமாக பணியை நிறுத்தியுள்ளனர்.
அங்காரா: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இது மீட்பு படையினருக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
எலும்பை உறைய வைக்கும் பனியில் மீட்பு படையினர் இரவு பகலாக தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளையும், உறவினர்களையும் இழந்தவர்கள் நிர்கதியாக சாலையின் ஓரங்களில் நடுங்கியவாறு நின்றுக்கொண்டிருக்கின்றனர். உதவிகள் கிடைத்தாலும் அது எத்தனை நாளைக்கு என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில் துருக்கி மக்கள் இருக்கின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக சரிந்து விழுந்து கிடக்கும் கட்டிடத்திற்கு முன்னர் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இடிபாடுகளுக்குள் இருந்து உறவினர்கள் யாரேனும் உயிருடன் வந்துவிட மாட்டார்களா என்கிற எதிர்பார்ப்புதான் அவர்களை காவல் காக்க வைத்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு சுவரையும் அகற்றும்போதும் அதன் கீழ் மரணமடைந்த உடல்கள் மட்டுமே கணக்கெடுக்கப்படுகிறது. உயிர் பிழைத்தவர்கள் அபூர்வமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் 2 வயது சிறுமி, ஆறு மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் 70 வயது மூதாட்டி ஆகியோர் தற்போது வரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

2 மாத குழந்தை
துருக்கியின் தென்கிழக்கு பதியான 'ஹாட்டி' எனும் இடத்தில் நேற்று மீட்புப் படையினர் கட்டிடக் குவியலை அப்புறப்படுத்தி வந்தனர். அப்போது உள்ளிருந்து அழுகை குரல் கேட்டிருக்கிறது. மீட்பு படையினர் உடனயாக இடிபாடுகளை வேக வேகமாக அகற்றினர். உள்ளே பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. அக்குழந்தையை மீட்ட பாதுகாப்பு படையினர் உடனடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதே இடத்தில் நேற்று காலை சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுவனை அஜர்பைஜான் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் மீட்பு படையினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

எல்லை திறப்பு
இந்நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருந்தாலும், சில புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ ஓரணியில் சேர்ந்திருக்கிறது. அதேபோல துருக்கி-அர்மீனியா எல்லையானது சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல திறக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறத்தில் மீட்பு படையினர் மீது உள்ளூர் கலவரக்காரர்கள் சிலர் தாக்குதல்களை தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரிய மீட்புப்படையினர் தங்கள் பணிகளை நிறுத்தியுள்ளனர்.

மீட்பு படைகள்
அதேபோல ஜெர்மன் நாட்டின் மீட்பு படையினர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு படையினருக்கு போதுமான உணவு கிடைக்காததால் மீட்பு பணிகள் தாமதமாகலாம் என்று சொல்லப்படுகிறது. இப்பிரச்னைகளை தொடர்ந்து துருக்கி ராணுவம் ஆஸ்திரிய மீட்பு படையினருக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்துள்ளது. இதற்கிடையில் கட்டிட இடிபாடுகளிலிருந்து பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

100 மணி நேரத்திற்கு பிறகு
உள்ளூரை சேர்ந்த இரு தரப்பினருக்கிடையேயான மோதல் துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலெழுந்திருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் மீட்புப் படையினர் ஏராளமானோரை 100 மணி நேரத்திற்கு பின்னரும் பத்திரமாக மீட்டுள்ளனர். காசியான்டெப் மாகாணத்தில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த சுமார் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications