துருக்கி: கடும் குளிரில்.. கட்டிடத்திற்கு கீழ் 122 மணி நேரம் சிக்கியிருந்த 2 பெண்கள் உயிருடன் மீட்பு
மீட்புப் படையினருடன் உள்ளூர் மக்களும் முழு வீச்சில் களம் இறங்கியதால் ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அங்காரா: துருக்கியை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது. இதில் 5 நாட்களுக்கு பின்னர் உயிருடன் 2 பெண்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் துருக்கி தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்தன. என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னரே ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மணிநேரம் கழித்துதான் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கின.
முதலில் 42 உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், மீட்பு பணிக்காக உலக நாடுகள் தங்கள் படைகளை அனுப்பி வைத்தன. இந்தியா 6 விமானங்களில் மீட்புப் படைகள், மருந்து பொருட்கள், மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்தது. மோசமான வானிலை காரணமாக தலைநகரிலிருந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் வானிலை சீரானதையடுத்து ஒவ்வொரு விமானமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பறந்தது.

நிலநடுக்கம்
பின்னர் மீட்பு பணிகள் துரிதமடைந்தன. ஒரு கட்டத்தில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஆயிரத்தை தொட்டது. பின்னர் இது தொடர்ந்து அதிகரிக்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு சடலம் கிடைத்தது. அதேபோல இந்த நிலநடுக்கத்தால் வீடு, உடமைகள இழந்தவர்கள் கடும் பனியில் திறந்தவெளியில் நிர்கதியாய் நின்றனர். இப்படி இருக்கையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கியை தாக்கியது. முதலில் வந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவாகியிருந்த நிலையில் இரண்டாவது நிலநடுக்கம் 7.6 ஆக பதிவாகியிருந்தது.

122 மணி நேரம்
இதனால் மீதமிருந்த கட்டிடங்களும் தரைமட்டமாகின. குழந்தைகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள், மீட்பு படையினருடன் சேர்ந்து களமிறங்கினர். இதனால் ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் ஐந்தாவது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், கடந்த 122 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த இரண்டு பெண்களில் 70 வயது மூதாட்டி ஒருவர் எவ்வித காயமின்றி உயிர் பிழைத்துள்ளார். அதேபோல 55 வயது பெண்மணி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 67 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிக்காக சுமார் 31 ஆயிரம் மீட்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இதுவரை 81 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். துருக்கியில் கடும் பனி பெய்து வருவதால் இவர்களில் மீட்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை. எனவே எலும்பை உறையவைக்கும் பனியில் இவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையை கண்ட பல்வேறு நாடுகளும் மருத்துவம் மற்றும் பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது.

உறுதி
சுமார் 31 கி.மீ நீளத்திற்கு இந்த உதவி பொருட்கள் ஏந்திய லாரிகள் துருக்கி சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று துருக்கி துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே உறுதியளித்துள்ளார். இதேபோன்று கடந்த 1939ம் ஆண்டு துருக்கியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் சுமார் 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேபோல 1999ம் ஆண்டு உருவான நிலநடுக்கத்தில் சுமார் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களை விட தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த துருக்கி மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications