உலகிலேயே அதி வெப்பமான ஆண்டு 2015ம் தானாம்.. அடுத்தாண்டும் சூரியன் தீயா வேலை செய்யுமாம்!
ஜெனிவா: நம்ம ஊரில் மழை கொட்டித் தீர்க்கிறது என்று கவலைப்படுகிறோம். ஆனால் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரீஸில் முக்கியத்துவம் வாய்ந்த, பருவ நிலை உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் உலக காலநிலை ஆய்வு அமைப்பானது மிகவும் சூடான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, நடப்பாண்டு தான் உலகிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டு என அது கூறியுள்ளது.

அதிக வெப்பநிலை...
மேலும், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக காலநிலை ஆய்வு அமைப்பின் தலைவர் மைக்கேல் ஜெர்ராவுத் கூறுகையில், " உலகின் வெப்பம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து நடப்பு ஆண்டுதான் கடல் மேற்பரப்பு அதிக வெப்பநிலையில் உள்ளது.

மோசமான செய்தி...
எனவே இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருக்கும். இவை பூமிக்கு மிகவும் மோசமான செய்தியாகும்" என்கிறார்.

2016லும் தொடரும்...
அதோடு இதே போன்று அதிக வெப்பநிலை அடுத்தாண்டும் நீடிக்கும் என மிரட்டுகிறது இந்த அமைப்பு. ஏற்கனவே இந்தாண்டு அக்டோபர் மாதம் மிகவும் அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சராசரி வெப்பம்
கடந்த 1961-1990 ஆண்டுகளின் சராசரி வெப்பமாக 14 டிகிரி செல்சியஸ் பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு வெப்ப நிலையானது அதை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது.

எல் நினோ...
இவ்வாறு அதிக வெப்பம், வெள்ளம் போன்றவற்றிற்கு எல் நினோவின் பாதிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது. பாரீஸ் மாநாடு நவம்பர் 30ம் தேதி தடங்கி 12 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வெப்ப நிலையைக் குறைக்க முயற்சி...
இந்த மாநாட்டில் உலகில் வெப்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. உலக அளவில் 2 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
எனவே மக்களே, நம்ம ஊரில் பெய்த மழையை வைத்து எந்தக் கணக்குக்கும் வரக் கூடாது..!












Click it and Unblock the Notifications