லைபீரியாவில் பரபரப்பு.. மருத்துவமனையில் கும்பல் தாக்குதல் - 29 எபோலா நோயாளிகள் ஓட்டம்!
மான்ரோவியா: எபோலா தாக்குதலால் சிக்கிப் போராடி வரும் லைபீரியாவில், ஒரு மருத்துவமனையில் திடீரென ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 எபோலா நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் மான்ரோவியாவில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு புகுந்த இக்கும்பல் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று மாலையில்தான் இந்தத் தாக்குதல் குறித்த விவரம் வெளியானது.
இந்த தாக்குதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் பீதியடைந்து ஓடினர். இவர்களில் 29 எபோலா நோயாளிகளும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நோயாளி கூட இல்லை
இதுகுறித்து கலவரத்தை நேரில் பார்த்த ரிபெக்கா வெஸ்ஸே என்பவர் கூறுகையில், உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த கதவுகளையும், ஜன்னல்களையும் சரமாரியாக அடித்து உடைத்தது. இதில் மருத்துவமனை முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. ஒரு நோயாளி கூட அங்கு இல்லை. அனைவரும் ஓடி விட்டனர் என்றார்.

எபோலா நோயாளிகள் கதி என்ன?
அங்கு தனி வார்டு ஒன்றில் எபோலா பாதித்த 29 பேர் தனியாக வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தனர். அவர்களும் தாக்குதலில் தப்பி ஓடி விட்டனர். அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

அதிபர் மீது ஆவேசம்
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் லைபீரிய அதிபர் எல்லென் ஜான்சன் சர்லீப் மீது ஆத்திரமாக இருந்துள்ளனர். அவர் பொய் சொல்கிறார். அவருக்குத் தேவை பணம்தான். இதனால்தான் எபோலா என்று பொய் சொல்லி வருகிறார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

டாக்டர்கள், நர்ஸுகளும் ஓட்டம்
இந்தத் தாக்குதலில் பீதியடைந்து டாக்டர்களும், நர்ஸுகளும் கூட ஓடிப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

லைபீரியாவில் அதிக பலி
கடந்த 1976ம் ஆண்டு முதல் உலகை வலம் வந்து கொண்டிருக்கும் எபோலா நோய் தற்போது ஆப்பிரிக்க நாடுகளைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இதற்கு லைபீரியாவில் மட்டும் 413 பேர் இறந்துள்ளனர். கினியாவில் 380 பேரும், சியர்ரா லியோனில் 348 பேரும், நைஜீரியாவில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications