திடீரென குலுங்கிய நேபாளம்.. நடுங்கிப்போன மக்கள்! 5.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சி
காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் தாக்கியதால் அங்கே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குட்டி நாடு நேபாளம். இமய மலைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 3 கோடி தான்.

இமய மலை மற்றும் பணிகளால் சூழப்பட்ட அழகிய நாடான நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அப்படியொரு வலிமையான பூகம்பம் தான் இப்போது நேபாளத்தைத் தாக்கியுள்ளது.
நேபாளத்தில் இன்று அக்டோபர் 22ஆம் தேதி 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. இந்திய நேரப்படி காலை 7.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, எதாவது உயிரிழப்புகள் நிகழ்ந்ததா என்பது குறித்து உடனடியாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
நேபாளத்தின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்திய எல்லைகளிலும் சில இடங்களில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேபாளம் இரண்டு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் எல்லையில் அமர்ந்திருக்கிறது. அதாவது இந்தோ-ஆஸ்திரேலிய மற்றும் ஆசியத் தட்டுகள் இணையும் பகுதியில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த தகடுகளின் மோதல் காரணமாகவே இமயமலை உருவானது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செமி விகிதத்தில், இவை ஒன்றுக்கொன்று எதிராகவும் கீழும் தள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.












Click it and Unblock the Notifications