மாலி நாட்டில் இந்தியர்கள் கடத்தல்! அல்-கொய்தா அட்டூழியம்! களமிறங்கிய இந்தியா
பமாக்கோ: மாலியை கைப்பற்றும் நோக்கில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினர், 5 இந்தியர்களை கடத்தியிருக்கின்றனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்திருக்கின்றன.
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்தியர்கள் கட்டத்தப்பட்டிருப்பதை அவர்கள் பணியாற்றிய நிறுவனமும், மாலி பாதுகாப்பு படைகளும் உறுதி செய்திருக்கின்றன. மாலியின் மேற்குப் பகுதியில் உள்ள கோப்ரி அருகே நேற்று முன்தினம் மாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், "ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்துகிறோம். நிறுவனத்திற்காகப் பணிபுரிந்த மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.
தற்போது ராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் மாலி, அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் குற்றக் குழுக்களால் ஏற்படும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த திணறி வருகிறது. நாட்டில் நிலவும் இந்த மோசமான பாதுகாப்பு சூழல் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஏழ்மையான இந்த நாட்டில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 'குரூப் ஃபார் தி சப்போர்ட் ஆஃப் இஸ்லாம் அண்ட் முஸ்லிம்ஸ்' (JNIM) என்ற அமைப்பு கடுமையான எரிபொருள் தடையை விதித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான ஆட்சிக்கவிழ்ப்புகளும் மோதல்களும் நிறைந்த மாலியில் வெளிநாட்டவர்களைக் கடத்துவது பொதுவான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications