பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு
செபு: பிலிப்பைன்ஸில் இன்று காலை 8.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸின் பொஹோல் தீவில் உள்ள கார்மன் நகரை மையமாகக் கொண்டு இன்று காலை 8.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 56 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் அப்பகுதி முழுவதும் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து செபு நகர் அருகில் உள்ள மீன் துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும் செபு மாகாணத்தில் மார்க்கெட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர் மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
செபுவில் 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து 8 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தக்பிலாபன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் சேதம் அடைந்துள்ளது. மேலும் நகரில் உள்ள மஹால் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் கார்மனின் தென்மேற்கு பகுதியில் உள்ள லோபோக் நகரில் இருக்கும் 17வது நூற்றாண்டு தேவாலயம் இடிந்து விழுந்தது. இது தவிர அப்பகுதியில் உள்ள பல பழைய தேவாலயங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில் செபுவில் உள்ள ஜிம்மில் அரசு நிதியுவதவி பெற காத்திருந்தவர்கள் கட்டிடம் குலுங்கியதும் ஓடத் துவங்கினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் பொஹோலில் 57 பேரும், செபுவில் 15 பேரும், சிகிஜாரில் ஒருவரும் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மொத்தம் 73 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று பிலிப்பைன்ஸில் தேசிய விடுமுறை என்பதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மனிலாவில் இருந்து 570 கிமீ தொலைவில் உள்ள செபு மாகாணத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அதன் அருகில் உள்ள பொஹோலில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடற்கரைகள் மற்றும் ரிசார்ட்டுகளால் இது பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.












Click it and Unblock the Notifications