தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 7.4 ஆக பதிவு- 7 பேர் பலி; 730 பேர் படுகாயம்!
தைபே: தைவான் நாட்டில் இன்று அதிகாலை அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து தைவான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தைவானைத் தொடர்ந்து ஜப்பானின், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரத்தில் தற்போது சுனாமி அபாயம் பெருமளவு நீங்கிவிட்டதாகவும் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த கடும் நிலநடுக்கத்தால் தைவானின் Hualien நகரில் பல மாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன. இதனால் பெரும் பதற்றம் தைவானில் நிலவுகிறது. பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தைவானில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தைவானில் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.

இதேபோல ஜப்பானின் தென் பகுதி ஒகினாவா தீவையும் தைவான் நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரிக்கப்பட்டது. ஜப்பானில் சுமார் 8 முதல் 9 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஒகினாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. யோன்குனி தீவுகளில் சுமார் 1 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
தைவான், ஜப்பான் நாடுகளின் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து பிலிப்பின்ஸ் நாடும் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
#WATCH | An earthquake with a magnitude of 7.2 hit Taipei, the capital of Taiwan.
— ANI (@ANI) April 3, 2024
(Source: Reuters) pic.twitter.com/SkHBHrluaZ
இருப்பினும் தற்போதைய நிலையில் தைவான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்கக் கூடிய அச்சம் பெருமளவு கடந்துவிட்டதாகவும் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்து வருகின்றன. தைவான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. தைவானில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 730 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்க பேரிழப்புகள் எண்ணிக்கை உயரக் கூடிய அச்சமும் இருக்கிறது என்கின்றன சர்வதேச செய்தி நிறுவனங்கள்..












Click it and Unblock the Notifications