முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்.. லெபனானை குறிவைத்து வான்வழி தாக்குதல்!
பெய்ரூட்: பாலஸ்தீனம் மீது போரை தொடுத்து வரும் இஸ்ரேல், தனது தாக்குதலை லெபனானுக்கும் நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று லெபனானின் டயர் நகரின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பாஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்குமான பகை உலகமே அறிந்ததுதான். பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. இடையில் அமெரிக்க உதவியுடன், இஸ்ரேல் தனது எல்லையை விரிவுப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனியர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துதான் பாலஸ்தீன விடுதலை குழுவான ஹமாஸ் உருவானது. மற்ற சுதந்திர அமைப்புகளை போல் அல்லாமல், இவர்கள் அரசியல் மற்றும் ஆயுதம் என இரண்டையும் கையில் எடுத்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இக்குழு எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த.. பதிலுக்கு இஸ்ரேல் இந்த போரை நடத்தி வருகிறது. ஹமாஸை ஒழிப்பதை மட்டுமே நோக்கம் என்று இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், இதுவரை 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். நுற்றுக்கணக்கில் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இறுதியாக சில நாட்களுக்கு முன்னர்தான் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றது.
இதன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், இஸ்ரேல் லெபனான் மீது போரை அறிவித்து ட்விஸ்டை கொடுத்தது. லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸுக்கு உதவுவதாகவும், எனவே ஹிஸ்புல்லாவை ஒழிக்க லெபனான் மீது போர் தொடுப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இன்று இஸ்ரேல் விமானப்படை, லெபனானில் உள்ள டயர் நகரின் மீது வான்வழித்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக லெபனான் அரசு கூறியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் குறித்த புதிய அச்சத்தை எழுப்பியுள்ளது. இனி ஹிஸ்புல்லாவை ஒழிக்கிறேன் என இஸ்ரேல், லெபனானை நாசம் செய்துவிடுமோ என பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும், எதிர் காலத்த்தில் தங்கள் மீதான தாக்குதல் அச்சுறுத்தலை தவிர்க்கவுமே இந்த போர் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனான் மீது போரை அறிவித்த பிறகு, அந்நாட்டின் நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications