கடலில் தத்தளித்த 9 பேரை மனிதச் சங்கிலியாக மாறி காப்பாற்றிய மக்கள்! அமெரிக்காவில் நெகிழ்ச்சி
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கடற்கரை ஒன்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட 9 பேரை காப்பாற்ற மனித சங்கிலியாக மாறிய 80 பேர் அவர்களை கரை சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெப்பம் நிலவி வருவதால் பெரும்பாலான மக்கள் கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் புளோரிடாவில் உள்ள பனாமா சிட்டி என்ற கடற்கரையில் சமீபகாலமாக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ராபர்டா உர்ஸ்ரே மற்றும் அவரது குடும்பத்தினரும் அந்த கடற்கரைக்கு கடந்த சனிக்கிழமை சென்றிருந்தனர். சிறிது நேரம் கழித்து தனது இரு குழந்தைகள் காணாமல் போனதை ராபர்டா கண்டறிந்தார்.

தேடலை தொடங்கினார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ராபர்டா குழந்தைகளை தேடிச் சென்றார். அப்போது கடற்கரையில் நீரில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டது. பதறியடித்து கொண்டு திரும்பி பார்த்தபோது இரு குழந்தைகளும் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது.

கடலுக்கு சென்றார்
உடனே ராபர்டாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குழந்தைகளை காப்பாற்ற சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை போக வேண்டாம் என எச்சரித்தனர். இருந்தும் ராபர்டா, அவரது தாய் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் ஆகியோர் கடலுக்குள் சென்றனர்.

15 அடி அலையில்
அந்த சமயத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து இந்த குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் 15 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் சிக்கிக் கொண்டனர். இதனிடையே ஜெசிக்கா மற்றும் டெரக் சிமன்ஸ் தம்பதி கடற்கரைக்கு சென்றிருந்தனர். அப்போது கடற்கரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஜெசிக்கா தண்ணீரில் தத்தளிக்கும் ராபர்டா குடும்பத்தினரை கண்டார்.

துணிச்சலாக இறங்கினார்
நீச்சல் தெரிந்த ஜெசிக்கா கடலுக்கு நீந்தி சென்று ராபர்டா குடும்பம் இருந்த இடத்தை அடைந்தார். அப்போது அந்த குடும்பத்தினர் ஒருவர் கூட நீரில் மூழ்கக் கூடாது. அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லி கொண்டார் ஜெசிக்கா. எனினும் ஒருவரால் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் என்ற நெருடலும் அவருக்கு இருந்தது.

மனித சங்கிலி
ஜெசிக்காவின் மனதை அறிந்த சிமன்ஸ் மற்றும் அங்கிருந்தோர் மனித சங்கிலியை உருவாக்கினர். அவர்களுள் நீச்சல் தெரியாதவர்கள் ஆழமற்ற நீரில் நின்று கொண்டனர். மற்றவர்கள் மட்டும் ஒருவர் கைகளை ஒருவர் பற்றிக் கொண்டு கடலுக்குள் சென்றனர். அதற்குள் 80 பேர் சேர்ந்து ஜெசிக்கா மற்றும் ராபர்டா இருக்கும் இடத்தை அடைந்தனர்.

மனித சங்கிலியால் கட்டி
பின்னர் சிமன்ஸ் மற்றும் வேறு சிலரும் நீரில் தத்தளித்த குடும்பத்தினரை சங்கிலியில் கட்டியது போல் கட்டிக் கொண்டு கரை சேர்த்தனர். இந்த சம்பவத்தில் ராபர்டாவின் தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு கை உடைந்தது. மற்றபடி அனைவரும் பாதுகாப்புடன் கரை திரும்பினர்.

மனிதநேயம்
விபத்தில் அடிப்பட்டாலே தமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்த்துவிட்டு போட்டோ எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் இந்த காலகட்டத்திலும் எங்கோ ஒரு மூலையில் மனிதநேயம் தழைத்து ஓங்கி நிற்கிறது மனித குலத்துக்கே பெருமை சேர்க்கிறது.












Click it and Unblock the Notifications