மின்சாரம் கேட்டு போராட்டம்: 9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த பாக். போலீசார்
லாகூர்: மின்சாரம் வேண்டி நடந்த போராட்டத்தில் பெற்றோருடன் வந்திருந்த 9 மாத குழந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் பாகிஸ்தான் போலீசார். இந்த விநோதமான வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது யாசீன் தங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப் படாததைக் கண்டித்து தனது குடும்பத்தினர் உட்பட் 25 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த காவல்துறைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் உண்டானது.
அதில் காயமடைந்த காவலர்கள் தங்களைத் தாக்கியதாக போராட்டம் நடத்திய 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், போராட்டம் நடத்திய யாசீனின் ஒன்பது மாத பேரன் தன்னைத் தாக்கியதாக, காசிப் என்ற போலீஸ் அதிகாரி அளித்த புகார் தான்.
இதனைத் தொடர்ந்து அந்த 9 மாத ஆண்குழந்தை மூசா மீதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக மூசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ரபாகத் அலி, மூசாவுக்கு வரும் 12ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் வலியுறுத்தினார் நீதிபதி.
அதற்கு முன்னதாக சிறு குழந்தைகள் இத்தகைய குற்றத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என தனது கருத்தை முன்வைத்த குற்றவாளிகளின் சார்பாக ஆஜரான இர்பான் தரார், மறு விசாரணையின்போது அந்த குழந்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், குழந்தையின் மீது தவறில்லை என்று காவல்துறையினர் அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான ஜாமீன் உறுதி செய்யப்படும் என்றும் தரார் குறிப்பிட்டார்.
தவறுதலாக குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தில் காவலர்களிடம் குழப்பம் நடந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரியான ரானா ஜப்பார் தெரிவித்துள்ளார். இந்தத் தவறுக்காக சப்-இன்ஸ்பெக்டர் காசிப் அகமது என்பவரைப் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜாமீன் வழங்கப் பட்டதையடுத்து அழுது கொண்டிருந்த மூசாவின் கை விரலை மையில் தோய்த்து சட்டப் பேப்பர்களின் கைநாட்டு வைத்தார் அவனது தாத்தா.












Click it and Unblock the Notifications