மாஸ் காட்டிய இந்திய கடற்படை கப்பல்.. ஓமன் கடலில் தத்தளித்த 8 இந்தியர்கள் மீட்பு.. என்ன நடந்தது?
மஸ்கட்: ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 16 மாலுமிகள் சிக்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, இதில் 9 பேரை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது.
கொமரோஸ் நாட்டை சேர்ந்த பிரெஸ்டீஜ் பால்கன் எனும் எண்ணெய் டேங்கர் கப்பலானது அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. டுக்ம் துறைமுகம் ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்து முக்கிய அங்கமாக உள்ளது.

ஆனால், துறைமுகத்திற்கு சென்று சேர்வதற்கு முன்னரே இந்த கப்பல் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் இலங்கையை சேர்ந்தவர்கள் 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்வர்கள் 13 பேர் மாலுமிகளாக பயணித்திருக்கின்றனர். எனவே இந்த 13 பேரின் நிலை என்ன ஆனது என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்திற்கானது. இப்படி இருக்கையில் கப்பல் தலைக்கீழாக கவிழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்தை கேள்விப்பட்டவுடன் இந்திய போர்க்கப்பலான INS Teg விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதில், தற்போது வரை 8 இந்தியர்களையும், இலங்கையை சேர்ந்தவர் ஒருவரையும் போர்க்கப்பல் மீட்டிருக்கிறது. இது குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
அதில், "கடந்த ஜூலை 15ம் தேதி, ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த கொமரோஸ் நாட்டு எண்ணெய் கப்பலில் பயணம் செய்த 8 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 9 மாலுமிகளை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான INS Teg மீட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 13 இந்தியர்கள் இருந்தனர். இந்திய கடற்படை மற்றும் ஓமான் மீட்புப் படையினர் இன்னும் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் அதன் கடல்சார் கண்காணிப்பு விமானமான P-8I, தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications