ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்.. ஆனாலும் தூய்மை பணியாளராக வாழும் 56 வயது நபர்.. சுவாரசிய பின்னணி
டோக்கியோ: ஜப்பானில் ஆண்டுக்கு வீட்டு வாடகையாக ரூ.2 கோடி வந்தாலும் கூட 56 வயது நபர் தூய்மை பணியாளர் போல் வாழ்க்கை நடத்தி வருகிறார். சொகுசான ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பாத அவர் யார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர் கொய்சி மத்சுபரா. இவருக்கு வயது 56. இவரது சிறுவயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்தார். இதனால் பள்ளி காலத்தில் ஏழ்மையை உணர்ந்தார். மேல்நிலை பள்ளியில் படிக்கும்போதே அவர் ‛பார்ட்-டைம்' வேலைக்கு சென்றார்.

மேல்நிலை படிப்பை படித்த பிறகு அவர் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு மாதசம்பளமாக ரூ.97 ஆயிரம் வழங்கப்பட்டது. அதனை அவர் சேமிக்க தொடங்கினார். அநாவசியமாக எந்த செலவையும் அவர் செய்தது இல்லை.
இதனால் குறிப்பிட்ட ஆண்டில் அவரிடம் நிறைய பணம் சேர்ந்தது. ரூ.16 லட்சம் மதிப்பில் அவர் முதல் முதலாக அடுக்குமாடி குடியிருப்பை அவர் வாங்கினார். அப்போது ஜப்பானின் வீடுகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருந்தது. அதன்பிறகு அதனை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க தொடங்கினார். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கொய்சி தனது சேமிப்பை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி குவித்தார்.
டோக்கியோ மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 8 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி வாடகைக்கு விட தொடங்கினார்.
பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட தொடங்கினார். அதிலும் பணம் கிடைத்தது. அதனை பங்கு சந்தைகளில் முதலீடு செய்தார். இபு்போது அவருக்கு 56 வயது ஆகிறது. மாதந்தோறும் ரூ.2 கோடி வரை வாடகை பணமாக கிடைக்கிறது. இப்படி கோடீஸ்வரராக மாறினாலும் கூட கொய்சி தூய்மை பணியாளர் போல் வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவர் சிறிய வீட்டில் வசிக்கிறார். எளிமையான முறையில் சமைத்து சாப்பிடுகிறார். புதிய ஆடைகளை அடிக்கடி வாங்காமல் இருக்கும் ஆடைகளை அணிந்து வருகிறார். சொந்தமாக அவரிடம் கார் கிடையாது. சைக்கிள் மட்டுமே ஓட்டி வருகிறார். அதேபோல் விலையுயர்ந்த செல்போன்கள் பல இருக்க அவர் சாதாரண ஆண்ட்ராய்டு செல்போனையே பயன்படுத்தி வருகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தினமும் காலையில் தனது அடுக்குமாடி குடியிருப்புகளை சுத்தம் செய்து வருகிறார். இதன்மூலமாக அவருக்கு ரூ.56 ஆயிரம் வரை கிடைக்கிறது. அதனையும் அவர் சேமித்து வைக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛ஜப்பானில் வீட்டு மனைகளின் மதிப்பு சரிவை சந்தித்தபோது என்னிடம் இருந்த பணத்தை சரியாக முதலீடு செய்தேன். இதனால் இப்போது கவலையின்றி இருக்கிறேன். எனக்கு எப்போதும் பணத்தை விட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் உழைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் என் செல்வ செழிப்பான வாழ்க்கையை யாரிடமும் காட்டி மரியாதை பெற விரும்பவில்லை. நான் நன்றாக வாழ விரும்புகிறேன். ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு பிடித்த வேலையை செய்து எனக்காக சிந்திக்க விரும்புகிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications