உலக வரைபடத்தில் ஏற்பட்ட சிக்கல்.. தென்னாப்பிரிக்காவிற்கு ஜாக்பாட்.. கோடியில் புரளும் கேப் டவுன்
கேப் டவுன்: உலக நாடுகள் மத்திய தரைக்கடல் மறறும் செங்கடல் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஆப்பிரிக்காவின் நம்பிக்கை முனையை சுற்றி செல்கின்றன. அதன் விளைவாக தென்னாப்பிரிக்கா தற்போது எதிர்பாராத விதமாகப் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. தற்போதைய உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் தென்னாப்பிரிக்காவிற்கு, குறிப்பாக கேப் டவுன்துறைமுகத்திற்கு ஒரு மிகப்பெரிய பொருளாதார ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, உலக வர்த்தகத்தின் இதயமாகக் கருதப்படும் சூயஸ் கால்வாய் வழித்தடம் கிட்டத்தட்ட முடங்கிப்போய் கிடக்கிறது. ஈரானுடனான ராணுவ பதற்றம் மற்றும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, உலகின் 70% கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதையை மாற்றியுள்ளன. இந்தப் படகுகள் அனைத்தும் இப்போது ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை வழியாகவே சுற்றிப் பயணிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவிற்கு ஜாக்பாட்
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல, இன்று ஆப்பிரிக்காவின் தென் முனை மீண்டும் உலக வர்த்தகத்தின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும்போது சுமார் 6,000 முதல் 9,000 கி.மீ கூடுதல் தூரம் பயணிக்க வேண்டும். இதற்குத் தேவையான டன் கணக்கிலான எரிபொருளை நிரப்ப கேப் டவுன், டர்பன் மற்றும் போர்ட் எலிசபெத் துறைமுகங்களையே கப்பல்கள் நாடுகின்றன.
கப்பல் பழுதுபார்ப்பு
நீண்ட தூரப் பயணத்தால் ஏற்படும் இயந்திரக் கோளாறுகளைச் சரிசெய்யும் 'கப்பல் பழுதுபார்ப்பு' தொழிலில் தென்னாப்பிரிக்கா பெரும் வருவாய் ஈட்டுகிறது. குறிப்பாக, பெரிய கன்டெய்னர் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்ட கேப் டவுன் துறைமுகம் இப்போது 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
15 நாட்கள் கூடுதல் ஆகும்
சூயஸ் கல்வாய்க்கு பதில் ஆப்பிரிக்காவை சுற்றி செல்ல 10 முதல் 15 நாட்கள் கூடுதல் நாட்கள் ஆகும் என்பதால், மாலுமிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் 'Chandling' சேவைகள் மூலம் தென்னாப்பிரிக்க நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
கேப் டவுன் மீண்டெழுகிறது
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேப் டவுன் துறைமுகம் செயல்திறன் குறைபாட்டால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இப்போது 2026-ல் உலக கடல் வழித்தடங்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, தென்னாப்பிரிக்க அரசு தனது துறைமுகக் கட்டமைப்புகளை நவீனப்படுத்த மிகப்பெரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் வர்த்தகத்தின் பெரும் பகுதி இப்போது தென்னாப்பிரிக்கக் கடற்கரையை ஒட்டி நடப்பதால், தென்னாப்பிரிக்காவின் ஜிடிபி-க்கு இது ஒரு வலுவான ஊக்கத்தை அளித்திருக்கிறது. இதனால் கேப் டவுன் அதிக லாபம் சம்பாதித்தாலும், அங்கு துறைமுகத்தில் நிலவும் பழைய உட்கட்டமைப்பு மற்றும் இயந்திரக் கோளாறுகள் காரணமாக கப்பல்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் இருக்கிறது. இதைச் சரிசெய்தால் அவர்கள் இன்னும் பல மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும்.
10 கோடி வரை செலவாகும்
கப்பல்கள் ஒரு முறை ஆப்பிரிக்காவைச் சுற்றி வர ஒரு கப்பலுக்கு சுமார் ₹9.26 கோடி முதல் ₹10 கோடி வரை கூடுதல் எரிபொருள் செலவாகிறது. இந்தத் தொகையின் பெரும் பகுதி தென்னாப்பிரிக்காவின் எரிபொருள் நிறுவனங்களுக்குச் செல்வது தான் ஹைலைட் ஆகும். ஏனெனில் சூயஸ் கால்வாயை விட ஆப்பிரிக்க வழி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் செல்ல 12 முதல் 16 நாட்கள் கூடுதல் பயணத்தை எடுக்கிறது. இந்த வழி மாற்றத்தால் உலகளவில் கன்டெய்னர் வாடகை 40-60% வரை உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தலையெழுத்தே மாறியது
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எடுத்த முடிவால், தென்னாப்பிரிக்காவின் தலையெழுத்தை மாற்றி உள்ளது. பல ஆண்டுகளுக்க பிறகு, ஆப்பிரிக்காவின் தென்கோடி மீண்டும் உலகின் "வர்த்தகக் காவலனாக உருவெடுத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என்ன விலை கொடுத்தாவது மீண்டும் சுயஸ் கால்வாயை திறக்க வைக்காமல் விடமாட்டார்கள் என்பதே எதார்த்தமான உண்மை.














Click it and Unblock the Notifications