உக்ரைன் புரட்சிப் படை குறித்து உங்களுக்குத் தெரியுமா....?
டோனெட்ஸ்க்: உக்ரைன் புரட்சிப் படை, ரஷ்ய ஆதரவாளர்கள், ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகள்.. இப்படிப் பல பெயர்களில் அழைக்கப்படும் உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் குறித்த முழுவிவரங்கள் இதற்கு முன்பு வெளியானதில்லை, யாருக்கும் இவர்களைப் பற்றி அதிகமும் தெரியாத நிலையே இருந்தது. ஆனால் மலேசிய விமானம் தகர்க்கப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் இவர்கள் பிரபலமாகி விட்டார்கள்..
சோவியத் யூனியனில் சகோதர தேசங்களாக இருந்தவைதான் ரஷ்யாவும், பக்கத்து நாடான உக்ரைனும். ரஷ்யாவைப் போலவே அணு ஆயுதம் உள்ளிட்ட சகல வசதிகளுடன், ஆயுத பலத்துடன் கூடிய நாடுதான் உக்ரைனும். அதேசமயம், ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து அது முழுமையாக விடுபட முடியாத நிலை. ஆனால் அதையும் மீறி அது ஐரோப்பிய நாடுகளுடனும், அமெரிக்காவுடனும் நட்பு பாராட்ட முனைந்ததால் டென்ஷன் ஆனது ரஷ்யா.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுடன் உறவு அல்லது ஐரோப்பிய நாடுகளுடனும் நெருக்கம் என்ற ஏதாவது ஒரு நிலையை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது உக்ரைன். ரஷ்யாவோ, உக்ரைன் ஐரோப்பிய யூனியில் இணைவதை அது விரும்பவில்லை. இதனால்தான் பிரச்சினை வெடித்தது.

நாடு பிளவுபட்டது
உக்ரைனில் அப்போது அதிபராக இருந்தவர் விக்டர் யனுகோவிச். இவரது அரசு, முதலில் ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைத்து ஐரோப்பிய நாடுகளுடன் பரந்துபட்ட வர்த்தக, அரசியல் தொடர்புகளை நெருக்கமாக்க, வலுவாக்க முயன்றது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. கடுமையாக எதிர்த்தது. இதனால் தனது நிலையிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் யனுகோவிச். மேலும் யனுகோவிச்சுக்கு எதிராக ரஷ்ய ஆதரவாளர்கள் பெரும் போர்க்கொடி உயர்த்தினர்.

கிளர்ந்தெழுந்த கிரீமியா
குறிப்பாக உக்ரைனின் கிழக்கில் உள்ள, ரஷ்ய இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிரீமியாவில் பெரும் பிரளயம் வெடித்தது. உக்ரைனிலிருந்து தாங்கள் பிரிய விருப்பம் தெரிவித்தனர். போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தன. ரஷ்யாவுடன் இணைவது தொடர்பாக வாக்கெடுப்பும் நடந்தது. துரித கதியில் செயல்பட்ட ரஷ்யாவும், கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டு உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் அதிர வைத்தது.

மேலும் வெடித்த போராட்டங்கள்
இதேபோல கிழக்கு உக்ரைனிலும் பிற பகுதிகளிலும் ரஷ்ய ஆதரவு போராட்டங்கள் வெடித்தன. ஆனால் கிரீமியா அளவுக்கு இவை பெரிதாகவில்லை, ஆதரவும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் போராட்டங்கள் தொடர்ந்தபடியே உள்ளது.

நகரங்களைப் பிடித்த போராட்டக்காரர்கள்
ஆனாலும் இவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து கிடைத்த ஆதரவு காரணமாக உக்ரைன் அரசுப் படையினருக்கு பெரும் சவாலாக மாறினர். இதன் காரணமாக ரஷ்ய எல்லையையொட்டி கிழக்கில் உள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட சில நகரங்களை இவர்கள் கைப்பற்றினர். இன்று வரை இவர்களிடம்தான் இந்த நகரங்கள் உள்ளன.

தனி பிரமதமர் - கவர்னர்
இந்தப் பகுதிகளை இணைத்து நிர்வாகத்தையும் இவர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கென்று பிரதமர், கவர்னர்களையும் கூட நியமித்துள்ளனர்.

என்னதான் வேண்டும்
இந்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தெளிவாக இல்லை. சில குழுக்கள் தங்களைத் தனி நாடாக்க வேண்டும் என்று கோருகின்றன. சில குழுக்கள் ரஷ்யாவுடன் இணைக்க கோருகின்றன. சில குழுக்கள் தனி சுயாட்சிப் பகுதியாக மாற்றக் கோருகின்றன. அனைத்துக் குழுக்களுக்கும் ரஷ்யா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவிப்பதுதான் இதில் முக்கியமானது.

ரஷ்யா தூண்டுகிறது - உக்ரைன் புகார்
இந்தக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவது, உளவு சொல்வது, பயிற்சி தருவது என்று அனைத்து வகையான ஆதரவையும் ரஷ்யா தருகிறது என்று ஆரம்பம் முதலே உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷ்யா மறுத்து வருகிறது. அதேசமயம், உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்களைக் காக்கும் உரிமை தனக்கு உள்ளதாக அது கூறி வருகிறது.

ரஷ்ய குடிமக்கள்
அதேசமயம், உக்ரைனில் செயல்படும் புரட்சிப் படைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்களை ரஷ்யக் குடிமக்கள் என்றுதான் கூறி வருகின்றனர்.

ரஷ்யாவின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது
இப்போதைய நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. காரணம், ரஷ்ய வீரர்கள் ஆயிரக்கணக்கில் புரட்சிப் படையினருடன் இணைந்து ரகசியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. பல நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நகரங்களில் வசிக்கும் மக்களும் ரஷ்யாவின் பூர்வகுடிகள் என்பதால் அவர்களின் ஆதரவும் இவர்களுக்கு உள்ளது. இப்பகுதிகளில் ரஷ்ய இனத்தவரே அதிகமும் உள்ளனர். எனவே உக்ரைனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சில பகுதிகளை உக்ரைன் தன் பக்கம் மீட்டாலும் கூட உக்ரைன் ராணுவத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதே மிச்சம்.

ரஷ்யாவைத் தாண்டி எதுவும் செய்ய இயலாது
உக்ரைன் மோதலைப் பொறுத்தவரை ரஷ்யாவைத் தாண்டி உக்ரைனால் எதுவும் செய்ய இயலாத நிலை. அமெரிக்காவும் தன் இஷ்டத்திற்கு மூக்கை நுழைக்க முடியாத நிலை. ஐரோப்பிய யூனியனும் கை கொடுக்க முடியாத நிலை. இவர்களில் யாராவது தலையிட்டால் ரஷ்யா கடும் தாக்குதலை நேரடியாகவே தொடுக்கத் தயங்காது என்பதால் அனைவரும் வேறு வழியில்லாமல் அமைதி காக்கும் சூழல்தான் கிழக்கு உக்ரைனில் நிலவுகிறது.

அமெரிக்காவும் முக்கியக் காரணம்
தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைக்கு அமெரிக்காவும் கூட ஒரு முக்கியக் காரணம்தான். காரணம், பல முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை நேட்டோவில் இணைத்து ரஷ்யாவை அது கடுப்பேற்றி வருகிறது. இது ரஷ்யாவை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்குள்ளும் அமெரிக்கா பலத்துடன் காலூண்றி விடாமல் தடுக்கவே உக்ரைனை துண்டாட அது முயலுகிறது.












Click it and Unblock the Notifications