ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையின்போது குண்டுவெடிப்பு: மாகாண ஆளுநர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள லோகார் மாகாணத்தில் இருக்கும் மசூதி ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததில் அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் பலியானார்.
ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் உள்ள புல் இ ஆலம் மசூதியில் பக்ரீத் பண்டியை முன்னிட்டு இன்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் சிறப்புரை நிகழ்த்தவிருந்தபோது அங்கிருந்த மேஜைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.
இதில் ஜமால் உடல் சிதறி பலியானார். இந்த சம்பவத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காபூலின் தெற்கில் உள்ள லோகாரின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்களின் பிடியில் உள்ளன.
ஆனால் இன்று காலை நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தான் ஜமால் லோகார் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு மற்றொரு கிழக்கு மாகாணமான கோஸ்டின் ஆளுநராக இருந்தார்.
பாகிஸ்தான் தாலிபான்களின் கமாண்டர் லதிப் மெஹ்சூதை அமெரிக்க படைகள் கைது செய்த சில நாட்களில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications