ஆப்கன்: தமிழக பாதிரியாரை கடத்த உதவிய 3 தாலிபன் தீவிரவாதிகள் கைது
காபூல்: தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட வழக்கில் தாலிபன் அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப் பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் ப்ரேம்குமார் என்பவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். அங்கு அவர் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையில் ஈடுபட்டதாகவும், இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் கடத்தப் பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது.
தமிழக பாதிரியாரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதனையடுத்து காபூலிலுள்ள இந்திய தூதர், ஹெராத் நகரிலுள்ள துணைத் தூதர் ஆகியோர் ஆப்கன் அரசுடன் இணைந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், பாதிரியார் கடத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளதாக ஆப்கன் அரசு அறிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தாலிபன் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் பாதிரியார் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் பற்றிய விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications