ஆப்கானிஸ்தான் கிராமத்தின் மீது மலையே சரிந்தது! பலியானோர் எண்ணிக்கை 2100ஆனது!!
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவியல் குவியலாக பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதகசான் என்ற நகரின் அருகே உள்ள பரீக் என்ற கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து ஒரு கிராமத்தின் மேல் விழுந்தது.
இதனால் அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300 வீடுகள் பூமியில் புதைந்தன. இதில் முதலில் 350 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவியல் குவியலாக பிணங்கள்
இதுதொடர்பாக பதகசான் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் நவீத் போரோட்டன், அளித்த பேட்டியில், பரீக் கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 2,100 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள் என கூறினார்.

அதிபர் இரங்கல்
நிலச்சரிவில் பரீக் கிராமமே புதைந்து போய் 2,100 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஹமீது கர்சாய் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

ஏக்கம், பரிதவிப்பு
நிலச்சரிவில் சிக்கியவர்கள் யாராவது உயிரோடு கிடைத்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் உள்ளூர் மக்களும் மீட்புப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, மண்வெட்டி கொண்டு இடிபாடுகளை தோண்டிப்பார்ப்பது நெஞ்சை உருக்கும் செயலாக அமைந்துள்ளது.

4 ஆயிரம் பேர் இடப்பெயர்வு
இதற்கிடையே நடந்த நிலச்சரிவில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீது தான் இப்போது நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தி வருகிறோம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.

மீண்டும் நிலச்சரிவு?
இந்த நிலையில் அங்கு மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications