முதல் முறையாக நிலவை எட்டிப் பார்க்கப் போகும் ஆப்பிரிக்கா!
பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்காவின் விண்வெளி வளர்ச்சிக் கழகமான சென் (Sen-The Foundation for Space Development) ஆப்பிரிக்காவின் முதல் நிலவுப் பயணத்தை தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களுடன் இதற்காக சென் கை கோர்த்துள்ளது.
ஆப்பிரிக்கா 2 மூன் என்று இந்த நிலவுப் பயணத்திற்கு தென் ஆப்பிரிக்கா பெயரிட்டுள்ளது. கடந்த வாரம் இதுதொடர்பான அறிவிப்பை அது கோலாகலமாக வெளியிட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவுத் தொகையாக 1.50 லட்சம் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல லூனார் மிஷன் ஒன் என்ற திட்டத்தையும் அது கையில் எடுத்துள்ளது. இந்த இரு திட்டங்களையும் பல்வேறு தரப்பிலிருந்தும் நிதியுதவி பெற்று நிறைவேற்ற அது முடிவு செய்துள்ளது.

மக்களையும் இந்த்த திட்டத்தில் இணைத்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இந்தத் திட்டத்தில் 5 டாலர் முதலீடு போட்டு யார் வேண்டுமானாலும் இணையலாம். மேலும் 25 டாலர் அல்லது 50 டாலர் பணம் செலுத்தினால் அவர்கள் தரும் டிவிட் செய்தி அல்லது வீடியோ செய்தியை நிலவிலிருந்து பூமிக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யவுள்ளதாம் சென் குழு.
முதலில் இந்தத் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக பலரிடமிருந்தும் கருத்துக்களைக் கோரியுள்ளனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணர்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள், யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
கேப்டவுன் பல்கலைக்கழகம் இதில் முதலில் களம் இறங்கியுள்ளது. ஆப்ரிக்கா 2 மூன் திட்டத்தை ஒரு கேஸ் ஸ்டடியாக அது எடுத்துக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மாறாக அறிவியல் கூறுகளை ஆப்பிரிக்க சமுதாயம் நுகர வேண்டும். அதுதான் எங்களது முதல் நோக்கம் என்று கூறுகிறார் சென் தலைமை செயலதிகாரி ஜோனதன் வெல்ட்மேன்.
ஆப்பிரிக்காவின் முதல் நிலவுப் பயணத் திட்டம் ஏற்கனவே ஆப்பிரிக்க சிறார்களைக் கவர்ந்து விட்டது. அவர்களிடையே ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது. அனைவரும் அதுகுறித்து ஆவலடன் பேசி வருகின்றனர் என்றார் அவர்.
ஆப்பிரிக்கா 2 மூன் திட்டக் குழுவினர் தற்போது பள்ளிச் சிறார்களையும் இத்திட்டத்தில் இணைக்கவுள்ளனர். அவர்களிடம் திட்டம் குறித்து விளக்கி வருகின்றனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் மொத்தம் 54 நாடுகள் உள்ளன. இதில் நைஜீரியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகள்தான் சொந்தமாக செயற்கைக்கோள்களை வைத்துள்ளன. 6 நாடுகளில் மட்டுமே தேசிய விண்வெளி அமைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடுகளிடையே தற்போது விண்வெளித் துறை குறித்த ஆர்வம் பெருகி வருகிறது. பலரும் ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்கா 2 மூன் திட்டத்தின் முதல் கட்டமானது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நீடிக்கவுள்ளது. அதேசமயம் நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதற்கு காலக் கெடு எதையும் இன்னும் சென் நிர்ணயிக்கவில்லை.
மேலும் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பி வெறும் ஆய்வு மட்டும் மேற்கொள்வதா அல்லது நிலவில் போய் இறங்கும் வகையிலான விண்கலத்தை அனுப்புவதா என்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.












Click it and Unblock the Notifications