பெரிய நம்பிக்கை.. முடிவுக்கு வருமா போர்? 2011க்கு பிறகு, சிரிய அமைச்சர் மீண்டும் சவுதி அரேபியா பயணம்
டமாகஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் போரின் வீரியம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. ஆனால் இதைவிட பல மடங்கு பாதிப்புகளை கடந்த 2011ம் ஆண்டிலிருந்து அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. சிரியாவில் தொடக்கத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள் பின்னர் திடீரென ஆயுதங்களை ஏந்த தொடங்கிவிட்டனர். இவர்களுடன் ஜிகாதி அமைப்புகளும் ஒன்று சேர கிளர்ச்சியாளர்களின் பலம் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இவர்களுக்கான ஆயுத உதவியை அமெரிக்கா, சவுதி மற்றும் துருக்கி செய்து வர அரசுக்கு ஆதராவக ரஷ்யா களமிறங்கியது. இப்படியாக இரு தரப்பினருக்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது. இந்த போர் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறினர். சுமார் 60 லட்சம் மக்கள் இப்படி அகதிகளாக வெளியேறி இருக்கலாம் என்றும், ஏறத்தாழ 5 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஐநா கூறியுள்ளது. எனவே இந்த பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில்தான் சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் மெக்தாத், சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானின் அழைப்பின் பேரில் பைசல் மெக்தாத் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவே அவர் இங்கு அழைக்கப்பட்டுள்ளதாக இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானி கூறியுள்ளார். இவர்கள் இருவரின் சந்திப்பின் போது சிரியாவில் நடைபெற்று வரும் போருக்கு அரசியல் தீர்வு காணப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல மேற்குறிப்பிடடதைப்போல அதிக எண்ணிக்கையில் சிரியாவிலிருந்து வெளியேறிய அகதிகளை எதிர்கொள்ள அண்டைநாடுகள் கடும் சவாலை சந்தித்தன. எனவே போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தி அகதிகளை மீண்டும் சிரியாவில் மீள் குடியேற்றம் செய்வது குறித்தும் இதில் விவாதிக்கப்படும். மேலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்பட வேண்டிய மனிதாபிமான உதவிகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி உதவுவதாக சிரியா குற்றம்சாட்டிய நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சவுதி சிரியாவிலிருந்து தனது தூதரை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தற்போது சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி சென்றிருப்பது இரு நாடுகளுக்கிடையேயும் புதிய உறவுகள் உருவாகும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications