ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நடத்திய துபாய் தமிழ் அமைப்புகள்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம், ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து, பணி மாற்றலாகி தாயகம் திரும்பும் உயர் அதிகாரிகள் ராதா கிருஷ்ணன் (துபாய்) மற்றும் கண்ணன் (ஷார்ஜா) ஆகியோருக்கு, ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணியளவில் துபாய்வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில், தேரா ரமதா ஹோட்டலில் பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழக்கரை தொழில் அதிபரும், SNG நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஹமீத் ஸலாஹூத்தீன், ராதா கிருஷ்ணன் மற்றும் கண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி, அமீரக வாழ் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றிய சேவையைப் பாராட்டியும், சென்ற இடமெல்லாம் அவர்கள் சேவை சிறக்கவும் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் லியாகத் அலி (ஈமான்), அரிகேசவநல்லூர் S.S. மீரான் (எஸ்.என்.ஜி. நிறுவன மேலாளர்), சபேசன் (ரிதம் ஈவென்ட்ஸ்), அமுதரசன் (எமிட்டா) , மோகன் பிள்ளை (முத்தமிழ் சங்கம்), கீழை ராஸா என்ற ராஜா கான்(தமிழ்த் தேர்), ப்ரியா ராஜன் (தமிழ்த் துளி), கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் (காயிதே மில்லத் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.