கன மழை, கடும் குளிர் காற்றால் என்ஜின் உறைந்து விபத்துக்குள்ளானதா ஏர் ஏசியா விமானம்?
ஜகர்தா: ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அந்த விமானத்தின் என்ஜின் கடும் குளிர் காற்று காரணமாக உறைந்து போய் செயலிழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையத் தகவல்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 சிங்கப்பூருக்கு கிளம்பியது. ராடாரில் இருந்து மாயமான விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது.
விமானம் விழுந்த கடல் பகுதியில் இருந்து இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விமான பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விமானம் எப்படி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்பது குறித்து புதிய சந்தேகம் ஒன்றை இந்தோனேசிய வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தன்று விமானம் பறந்த பகுதியில் புயல் வீசியுள்ளது. கன மழையும் பெய்துள்ளது. கடும் குளிர்காற்றும் வீசியுள்ளது. இதன் காரணமாக மேகங்களுக்கு இடையே விமானம் பறந்தபோது என்ஜினில் ஐஸ் உருவாகி செயல்பாடு இழந்திருக்கலாம் என்று அந்த இணையதளம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில், தட்பவெட்ப நிலை மைனஸ் 80 முதல் 85 டிகிரி செல்சிஸாக இருந்துள்ளது. இதனாலும் என்ஜின் உறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.