ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசியாவுக்கு உதவும் ஆஸ்திரேலியா
ஜகர்தா: இந்தோனேசிய கடல் பகுதியில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய ராணுவ விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விமானத்தை தேடும் பணி இன்று துவங்கியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய விமானப் படைக்கு சொந்தமான (ஆர்ஏஏஎப்) ஏபி-3சி ஓரியான் விமானம் இந்தோனேசியாவுக்கு கிளம்பி வந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய விமானப் படை தளபதி மார்க் பின்ஸ்கின் கூறுகையில்,
ஓரியான் விமானம் தேடல் மற்றும் மீட்பு பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் ராடார், இன்ப்ராரெட் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார்கள் உள்ளதால் தேடல் பணிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். விமானத்தை தேடுவது தான் தற்போதைய குறிக்கோள். சில பயணிகள் மற்றும் சிப்பந்திகளையாவது உயிருடன் மீட்போம் என்று நம்புகிறோம் என்றார்.
ஏர் ஏசியா விமானத்தை தேட சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் உதவ முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications