கடலுக்கு அடியில் ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி விரைவில் துவங்கும்
ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தை நீருக்கு அடியில் தேடும் பணி துவங்க உள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து 155 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஜாவா கடலில் மிதந்த விமான பணிப்பெண் ஹைருன்னிஸா உள்பட 9 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஹயாத்தி லுத்பியா ஹமீது(48) என்ற பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானம் ஜாவா கடலின் அடிப்பகுதியில் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் சில பாகங்கள் கிடைத்துள்ளபோதிலும் அதன் உடற்பகுதி இன்னும் கிடைக்கவில்லை.
விமானம் விழுந்த இடத்தை கிட்டத்தட்ட கண்டுபிடித்தாகிவிட்டது. இந்நிலையில் விமானத்தை நீருக்கு அடியில் தேடும் பணி துவங்க உள்ளது. நீருக்கு அடியில் விமானத்தை தேட சிறப்பு கருவிகள் பிரான்சில் இருந்து இந்தோனேசியாவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications