சிரியாவில் 7 கிராமங்களைக் கைப்பற்றிய அல் கொய்தாவின் கூட்டாளி "நுஸ்ரா"!
பெய்ரூட்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் கூட்டாளி அமைப்பான நுஸ்ரா பிரண்ட் என்ற அமைப்பு, சிரியாவில் ஏழு கிராமங்களைப் பிடித்துள்ளது.
இந்த கிராமங்கள் அனைத்தும் வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ளன. கடந்த சில மணி நேரங்களில் இந்த கைப்பற்றலை நிகழ்த்தியுள்ளது நுஸ்ரா என்று சிரிய மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
பலான், கன்சப்ரா, அப்லின், அப்திதா, முகரா, மஷுன் ஆகியவையே தீவிரவாதிகள் கைக்குப் போயுள்ள 7 கிராமங்களில் ஆறு ஆகும்.
இந்த கிராமங்களை சிரிய அதிபருக்கு எதிராக போராடி வரும் சிரிய புரட்சிப் படையினரிடமிருந்து தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக சிரிய அதிபர் பாஷர் அல் அஸ்ஸாத்துக்கு ஆதரவான ராணுவத்தின் வசம் இருந்த இத்லிப் நகரை தீவிரவாதிகள் கடும் போருக்குப் பின்னர் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து மற்ற கிராமங்களை அவர்கள் பிடித்தனர்.
இத்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் புரட்சிப் படையினர் கையில் உள்ளது. இருப்பினும் பல முக்கிய நகரங்கள் தொடர்ந்து அரசுப் படையினர் வசம் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இத்லிப் மாகாணத்திற்குள் தனது தீவிரவாதப் படையை நுஸ்ரா அனுப்பியிருந்தது. இப்பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் முன்னேறி வருவதால் அவர்களுக்கு முன்பாக இத்லிப்பைப் பிடிக்க அவர்கள் மும்முரமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.