மனித வாடையே இல்லை! 26 வருடம் அமேசானில் தனியாக வாழ்ந்த "மர்ம" நபர்.. மொத்த இனமும் அழிந்த சோகம்!
அமேசான்: அமேசான் காட்டில் தனியாக கடந்த 26 வருடமாக வசித்து வந்த "குழி மனிதர்" மரணம் அடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க பலரை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரேசிலில் இருக்கும் அமேசான் காடு உலகிலேயே மிகப்பெரிய, மிக நீண்ட காடு ஆகும். மனிதர்களுக்கு தெரியாத பல ஆயிரம் விலங்குகள், பறவைகள் இந்த காட்டுக்குள் இருக்கின்றன.
அதே சமயம் மனிதர்களுடன் தொடர்பு இல்லாத பல பழங்குடி இன குழுக்களும் கூட இந்த காட்டுக்குள் இருக்கின்றன.இந்த அமேசான் காடுதான் பூமியின் தட்ப வெப்பத்தை பெரிய அளவில் காத்து வருகிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் இருக்கும் நிலங்களை பிரேசிலை சேர்ந்த பண்ணையார்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதாக புகார்கள் வருகின்றன. இந்த காட்டில் மரங்களை வெட்டி அந்த நிலத்தை அபகரித்து வருவதாக இவர்கள் மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

என்ன நடந்தது?
இதற்காக பண்ணையார்கள் செயற்கையான காட்டுத்தீயை இங்கே உருவாக்கி காட்டை அழிப்பதாகவும், பல இடங்களில் பழங்குடி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் இடங்களை பறிப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமேசான் காட்டில் வசிக்கும் பெயர் இடப்படாத பழங்குடி இன குழுவை சேர்ந்த ஒரு நபர் கடந்த 6 நாட்களுக்கு முன் பலியானார். குழி மனிதன் என்று அழைக்கப்படும் இவர் அமேசான் காட்டில் கடந்த 26 வருடமாக இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

யார் இவர்?
அமேசான் காட்டில் உள்ள பல்வேறு பழங்குடி இன குழுவில் இவர் ஒரு குழுவை சேர்ந்தவர். பெயர் இடப்படாத அந்த குழுவை சேர்ந்த பலர் 1970களில் இருந்து வரிசையாக கொல்லப்பட்டு வந்துள்ளனர். நிலத்தை அபகரிக்க வேண்டும் என்பதற்காக பண்ணையார்கள் இந்த பழங்குடி இன மக்களை கொன்று குவித்து உள்ளனர். அதில் இருந்து தப்பித்து 7 பேர் மட்டுமே தனி தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் மீது அப்பகுதி சுரங்க ஓனர்கள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல்
1995 ஆம் ஆண்டில் சுரங்க நிறுவன ஓனர்களின் தாக்குதலில் இந்த குழுவை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். மீதம் ஒரு நபர் மட்டுமே இருந்தார். இந்த இனம் மொத்தமும் அழிக்கப்பட்டதால் இவர் மட்டும் தனியாக அமேசான் காட்டில் குழி தோண்டி அதில் வசித்து வந்தார். இதனால் இவரை குழி மனிதர் என்று அழைப்பார்கள். அமேசான் காட்டில் வசிப்பவர்களுக்கான உரிமைகளை பேசும் Indigenous Affairs Agency (Funai) என்று அமைப்பு மட்டும் இவரை கண்காணித்து வந்தது.

கொலை
இவரும் கொல்லப்பட கூடாது என்பதால் இவரை அந்த அமைப்பு கண்காணித்து வந்தது. இந்த நிலையில் அந்த ஒரு நபரும் கடந்த 23ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இவரின் குழிக்கு வெளியே இருந்த கீத்து கட்டிலில் இவர் சடலமாக கிடந்தார். இவரின் உடலில் காயங்கள் இல்லை. இவர் இயற்கையாக மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவரின் உடலை சுற்றி நிறைய இறகுகள் வண்ண வண்ணமாக அடுக்கப்பட்டு இருந்தது.

என்ன நடந்தது?
இதனால் அவரே தானாக மரணத்தை எதிர்ப்பார்த்து அலங்கரித்து இருப்பார். தான் இறக்க போவது அவருக்கு தெரிந்து உள்ளது. அதனால்தான் தனது படுக்கையை சுற்றி இவர் அலங்காரம் செய்துள்ளார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு 60 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரின் மற்ற பழங்குடி உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட போது இவருக்கு வெறும் 13 வயதே இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

எங்கே இருந்தார்?
டணாறு என்ற பகுதியில் இவர் வசித்து வந்தார். இவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்த பின் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என்று தெரிய வரும். இவரின் குறிப்பிட்ட இன குழுவில் வாழ்ந்த கடைசி மனிதர் இவர்தான். இதோடு அமேசானில் வசித்து வந்த அந்த குறிப்பிட்ட பழங்குடிகளின் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. இன்னும் வெகுசில பழங்குடி இன குழுக்கள் மட்டுமே அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது .












Click it and Unblock the Notifications