ஒரு 'குட் நியூஸ்': 'எபோலா' தாக்கிய அமெரிக்க டாக்டர் குணமடைந்து வீடு திரும்பினார்
நியூயார்க்: எபோலா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கென்ட் பிரான்ட்லி குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1, 350 ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக லைபீரியாவில் தான் அதிகாமானோர் பலியாகியுள்ளனர். எபோலா வைரஸ் தாக்கி லைபீரியாவில் இதுவரை 576 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் லைபீரியாவில் பணியாற்றி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் கென்ட் பிரான்ட்லியை எபோலா வைரஸ் தாக்கியது.

இதையடுத்து அவர் கடந்த 2ம் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். அமெரிக்கா வந்த அவர் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு எபோலா காய்ச்சலுக்கு அமெரிக்கா தயாரித்த இசட்மாப் மருந்து சோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
இசட்மாப் மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். லைபீரியாவில் எபோலா காய்ச்சலால் அவதிப்படும் 3 டாக்டர்களுக்கு சோதனை அடிப்படையில் இசட்மாப் கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல் நலம் தேறி வருவதாக லைபீரிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications