ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார்? இந்தியாவில் இல்லையா? விளக்கம் கேட்கும் வங்கதேச அரசு.. என்ன நடந்தது?
டாக்கா: மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி ஐக்கிய அரபு அமீரகம் சென்று விட்டதாக வங்கதேசத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத போராட்டம் வெடித்தது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நிலைமை கையை மீறி சென்றதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து தற்போது வங்கதேசத்தில் நோபல் பரிசு வென்ற பொருளாதார ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டை விட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்கதேசத்தை விட்டு வெளியேறி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் தற்போது எங்கு உள்ளார் என்ற கேள்வி திடீரென சமூக வலைத்தளங்களில் எழத்தொடங்கியுள்ளன.
வங்கதேச சமூக வலைத்தளங்களில், கடந்த சில நாட்களாக ஷேக் ஹசீனா குறித்து சில தகவல்கள் பரவி வருகின்றன. அதில் ஷேக் ஹசீனா, இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரி ஹூசைனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஹூசைன் கூறியதாவது:-
"ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறார் என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. ஷேக் ஹசீனாவின் இருப்பிடம் குறித்து டெல்லியிடமும், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் விசாரித்தோம். ஆனால், இதுவரை யாரிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ பதில் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கலாம் என்றும் தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், இதை உறுதி செய்ய எங்களால் முடியவில்லை" என்றார்.
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்தியாவுக்கு தப்பி வந்த ஷேக் ஹசீனா, அதன்பிறகு பொதுவெளியில் வரவில்லை. ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஷேக் ஹசீனா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தனக்கு நியாயம் வேண்டும் என்றும், பயங்கரவாத செயல்கள், கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பிறகு அவரிடம் இருந்து அறிக்கையோ, வேறு ஏதேனும் பேட்டியோ வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications