பல ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுவித்த இஸ்ரேல்! ஒரு மருத்துவரை மட்டும் ரிலீஸ் செய்ய மறுப்பு.. யார் அவர்?
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் கீழ் இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. ஆனால், ஒரு மருத்துவரை மட்டும் விடுவிக்க இஸ்ரேல் மறுத்தே வருகிறது. யார் அந்த மருத்துவர்.. அவர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்.. இஸ்ரேல் அவரை விடுவிக்க மறுப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா தலையீடு காரணமாக இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் தன்வசம் இருந்த பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. மறுபுறம் இஸ்ரேலும் தன்னிடம் இருந்த பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது. அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் மீதமுள்ள 20 பிணைக்கைதிகளை விடுவித்த நிலையில், இஸ்ரேல் தனது காவலில் இருந்த பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் தொடங்கியது.

ஒருவரை மட்டும் விடுவிக்கவில்லை
இதில் பெரும்பாலான பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நபரை மட்டும் இஸ்ரேல் விடுவிக்கவே இல்லை. அதுதான் காசா மருத்துவமனையில் இருந்த டாக்டர் ஹுசாம் அபு சஃபியா. இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்டார். டாக்டர் ஹுசாம் அபு சஃபியா யார்? அவர் ஏன் கைது செய்யப்பட்டார்? என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
யார் அவர்!
பெய்ட் லஹியாவில் உள்ள கமல் அட்வான் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் ஹுசாம் அபு சஃபியா. இஸ்ரேல் தாக்குதலில் தனது மகனை இழந்த சஃபியா, கமல் அட்வான் மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றினார். கடந்த 2024 டிசம்பரில் இஸ்ரேல் படைகள் இந்த மருத்துவமனையில் அதிரடி ரெய்டை நடத்தியது.
மருத்துவமனையில் ரெய்டு நடத்திய போது, அங்கிருந்த சுகாதார ஊழியர்களை வெளியேறச் சொல்லி இருக்கிறது இஸ்ரேல். இருப்பினும், மருத்துவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்பதே முக்கியம் எனச் சொல்லி சஃபியா அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டாராம். இஸ்ரேல் படைகளின் கடும் அழுத்தத்திற்கு பிறகே சஃபியா வெளியேறி இருக்கிறார். அதன் பிறகு உடனடியாக அவரை கைது செய்துள்ளது.
உறுதிப்பாட்டின் அடையாளம்
காசா சுகாதார படையினர் மீது இஸ்ரேல் நடவடிக்கை எடுத்த நிலையில், பாலஸ்தீன மருத்துவர்களின் உறுதிப்பாட்டின் அடையாளமாக சஃபியா இருந்தார். அதேநேரம் சஃபியா மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லையாம். அவர் மீது விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்படி எந்தவொரு புகாரும் இல்லாமலேயே இஸ்ரேல் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் வைத்திருந்தது.
டிசம்பரில் கைது செய்யப்பட்டாலும் கூட பிப்ரவரி மாதம் வரை சஃபியாவை பார்க்கக் கூட யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும் கடுமையாக வலியுறுத்திய பிறகே அவரை பார்க்க அனுமதி தரப்பட்டது. சிறையில் தனது இஸ்ரேல் படைகள் தாக்குவதாகவும் துன்புறுத்துவதாகவும் சஃபியா குற்றஞ்சாட்டினார். இதனால் சஃபியா அதிக எடை இழந்து மிக மோசமான நிலையில் இருக்கிறார்.
இஸ்ரேல் விடுவிக்காதது ஏன்
சஃபியா ஹமாஸ் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று இஸ்ரேல் சந்தேகிக்கிறது. அவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றாலும் இவரை "சட்டவிரோதப் போராளி" என்று சொல்லியே இஸ்ரேல் சிறையில் அடைத்துள்ளது. இதன் காரணமாகவே அவரை விடுவிக்க இஸ்ரேல் மறுக்கிறது. அதேநேரம் அவர் பாலஸ்தீன போராளிகளின் உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் மாறலாம் என்பதாலும் அவரை விடுவிக்க இஸ்ரேல் மறுக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை விடுவிக்கக் கோரி உலகெங்கிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதையும் தாண்டி இஸ்ரேல் அவரை விடுவிக்க மறுத்தே வருகிறது.












Click it and Unblock the Notifications