யாரைப் பார்த்து "கரையான்"னு சொல்றீங்க.. அமித் ஷாவுக்கு வங்கதேசம் கடும் கண்டனம்
Recommended Video

டாக்கா: இந்தியாவில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கரையான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்துள்ளார். இதற்கு வங்கதேச தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கரையான்கள் என விமர்சித்துள்ளார் அமித் ஷா. ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். இது வங்கதேசத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச அமைச்சர் ஹசனுல், அமித் ஷாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசனுல் கூறுகையில் தேவையில்லாமல் கருத்து கூறியுள்ளார் அமித் ஷா. இது முறையற்றது. இந்தியாவில் எந்த வங்கதேசத்தவரும் குடியிருக்கவில்லை. வங்கமொழி பேசுவோர் எல்லோருமே வங்கதேசத்தவர் என கருதக் கூடாது. அவரது பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் தர விரும்பவில்லை. இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.
உண்மை நிலை என்ன என்பதை அமித் ஷாவுக்கு அவரது கட்சி எடுத்துக் கூறினால் நல்லது. இந்திய வங்கதேச உறவு குறித்துப் பேச அமித் ஷாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இரு நாட்டு உறவும் சிறப்பாக உள்ளது. இந்த விவகாரத்தை இந்திய அரசிடம் நாங்கள் கொண்டு செல்லப் போவதில்லை என்றார் அவர்.
முன்னதாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக புகுந்து குடியேறியுள்ள இவர்கள் கரையான்களைப் போல நமது வளங்களை அரித்துக் கொண்டுள்ளனர். நமது ஏழைகளுக்குப் போக வேண்டிய உணவை இவர்கள் உண்ணுகின்றனர். இவர்களால் நமது ஏழைகள் பலியாகும் நிலை ஏற்படுகிறது. இவர்களை அடையாளம் கண்டு விரட்டியடிப்போம் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications