கரைந்து போன தேவதை... கண்ணீர்க் கடலில் மலேசிய தமிழ் ஏர் ஹோஸ்டஸ் பிரமீளாவின் குடும்பம்!
கிளாங், மலேசியா: ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி பாதி வயதிலேயே தனது கனவு வாழ்க்கையை முடித்துள்ளார் மலேசியத் தமிழ்ப் பெண்ணான ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரன்.
30 வயதேயாகும் ஏஞ்செலினின் அகால மரணம் அவரது குடும்பத்தார், உறவுகள், நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது பேஸ்புக்கில் இரங்கல்கள் குவிந்து வருகின்றனர். பலர் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து இரங்கல் தெரிவித்தும், நினைவு கூர்ந்தும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.
கிளாங் பகுதியைச் சேர்ந்தவர்
பிரமீளா, மலேசியாவின் கிளாங் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இளம் வயது முதலே விமான பயணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
சாகசங்களில் விருப்பம்
அதேபோல நீர் விளையாட்டு உள்ளிட்ட சாகசங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
தாய் மண் பாசம்
தனது தாய் மண் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர் பிரமீளா. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இந்தியா மீதும் அதிக பாசத்துடன் இருந்து வந்தவர்.
கேரளாவில் சுற்றுப்பயணம்
கடந்த மார்ச் மாதம்தான் பிரமீளா, கேரளாவுக்கு சுற்றுப்பயணமாக வந்து போயுள்ளார். அந்தப் பயணத்தின்போது கேரளாவின் எழிலை ரசித்து அதன் புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் பிரமீளா.
உலகம் சுற்றிய பறவை
விமானப் பணிப் பெண்ணாக பல நாடுகளுக்கும் சிறகடித்துப் பறந்த இந்த அழகுப் பறவை இன்று பஸ்மாகிப் போய் விட்டது அவரது உறவுகளையும், நட்புகளையும் அதிர வைத்துள்ளது.