என்னடா நடக்குது இங்கே.. விலங்குகளையே குழப்பும் சூரிய கிரகணம்
சூரிய கிரகணத்தின் போது விலங்குகளுக்கு பெரும் குழப்பமான மன நிலை இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: இயற்கை சீற்றங்களை, நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் அறிவு விலங்குகளுக்கு உண்டு என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம்,
சூரிய கிரகணத்தின்போது, விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு விடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வந்து சூரியனை மறைப்பதுதான் சூரிய கிரகணம். இது அமெரிக்காவின் முக்கிய இடங்களில் நன்றாக பார்க்க முடியும்.
இந்த நிலையில் சூரிய கிரகணம் ஏற்படும்போது விலங்குகளுக்கு அது பெரும் குழப்பத்தைக் கொடுக்குமாம். விலங்குகளை குழப்பமடைய வைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகவே இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மனிதர்களுக்கு பிரமிப்பு
இயற்கையின் அற்புதங்களை மனிதர்கள் தங்கள் கண்களால் காண நிகழும்போது அதை பிரமிப்பாக பார்ப்பர். அதுபோல்தான் இந்த சூரிய கிரகணமும். ஆனால் விலங்குகளோ சற்றே கலக்கமடைந்த நிலையிலும், பீதியிலும் இருக்குமாம்.

கிரகணத்தின்போது ஆய்வு
பகலில் நடைபெறும் முழு கிரகணத்தின்போது விலங்குகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். கடந்த 1544-இல் நடந்த முழு சூரிய கிரகணத்தின்போது பறவைகள் பாடுவதை நிறுத்திவிட்டன. அதன்பிறகு 1560-இல் பறவைகள் வானிலிருந்து கீழே விழுந்துள்ளன.

கோழிகள் ஓய்வெடுக்கும்
கடந்த 1932-இல் புதிய இங்கிலாந்தில் கிரகணத்தின்போது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கோழிகள் ஓய்வெடுப்பதையும், தேனீக்கள் கூட்டுக்கு திரும்புவதையும் கண்டறிந்தனர்.

எட்டுக்கால் பூச்சிகள்
கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெற்ற கிரகணத்தின்போது கூடு கட்டும் எட்டுக்கால்பூச்சிகள் கட்டிய கூட்டை அழித்துவிட்டு கிரகணம் முடிந்து சூரியன் காட்சியளித்தபோது திரும்பவும் கட்டினவாம்.

முன்னர் நிகழ்ந்த கிரகணங்கள்
முன்பு நடைபெற்ற சூரிய கிரகணத்தின்போது ஆப்பிரிக்காவில் உள்ள யானைகள் உறங்கும் இடத்துக்கு சென்றன. அதேபோல் மிருககாட்சிசாலைகளில் உள்ள மனிதகுரங்குகள் வானத்தையே உற்று நோக்கி கொண்டிருந்தன. இவை வானில் ஏற்படும் மாற்றங்களால் என்ன நிகழ்கிறது என்று அறியாமல் ஏற்படும் குழப்பங்களாம். வரும் திங்கள்கிழமை சூரிய கிரகணத்தின்போது விலங்குகளுக்குள் நிகழும் மாற்றங்களை காண விஞ்ஞானிகள் உற்று நோக்கவுள்ளனர்.

செடிகளுக்கும்...
இதுபோன்ற மாற்றம் செடிகளுக்கும் நிகழுமாம். அதன் இலைகள் இரவு பொழுதில் காணப்படுவதை போல் இருக்குமாம். மொத்தத்தில் விலங்குகள், பறவைகளுக்கு சூரிய கிரகணம் வந்து விட்டால், அது பயம் கலந்த நிகழ்வாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications