அனிதாவுக்காக மெரினாவான அமெரிக்காவின் சிலிக்கன்வேலி
பிரிமான்ட்: மாணவி அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், நீட் தேர்விற்கான எதிர்ப்பை பதிவு செய்யவும் அமெரிக்கா முழுவதும் அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
நேற்று மாலை 6:30 மணிக்கு கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோ அருகில் உள்ள பிரிமான்ட் நகரில் மாணவிக்கு அஞ்சலி மற்றும் நீட் தேர்விற்கு எதிரான ஆர்பாட்டம் அகியவை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த போராட்டத்திற்காக மாலை நேரத்தில் பிரிமான்ட் நகரில் குவிந்தனர்.

அனிதா
அனைவரும் நீட் தேர்விற்கு எதிரான பதாகைகளை வைத்திருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பினர். பிறகு மாணவி அனிதாவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நீட் தேர்விற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றியும், நீட் தேர்வினால் எவ்வாறு தமிழகத்தின் வருங்காலமே பாதிக்கப்படவுள்ளது என்பது பற்றியும் விளக்கி பேசினர்.

அஞ்சலி
அனிதா மரணத்திற்கு அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தேர்வின் மாயை மற்றும் கொடிய பின்னணி பற்றியும், நீட்டை தமிழர்களும், பிற மாநிலத்தவர்களும் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது பற்றியும், நீட் எவ்வாறு சமூக நீதிக்கு எதிரானது என்பது பற்றியும் விளக்கும் துண்டறிக்கை அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.

இந்தியர்கள்
இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்களை தவிர்த்து ஆந்திரா மற்றும் வடநாட்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட தலித் இயக்கத்தினரும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். மக்கள் போராட்ட வாசகம் தாங்கிய பதாகைகளை கண்ட அந்த பகுதியில் வாகனத்தில் பயணம் செய்வோர், வாகன ஒலி எழுப்பி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

போராட்டம்
சிலிக்கன்வேலி தமிழர்கள் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை மற்றும் நீட் தேர்வு என அனைத்து தமிழக பிரச்சனைகளுக்கும் போராட்டம் நடத்தி தங்களது தார்மீக கடமையை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications