நடுவானில் மீண்டும் 'சீட்' சண்டை: அமெரிக்காவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்
நியூயார்க்: நடுவானில் பயணிகள் இருவர் இருக்கை தொடர்பாக சண்டை போட்டதால் நியூயார்க்கில் இருந்து பாம் பீச்சுக்கு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புளோரிடாவில் உள்ள பாம் பீச்சுக்கு கிளம்பியது. அப்போது விமானத்தில் இருந்த ஒரு பெண் தனது இருக்கையை சற்று சாய்த்துள்ளார். அந்த நேரத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது டிரே டேபிளில் தலையை வைத்து தூங்க முயன்றுள்ளார்.
ஏன் இருக்கையை பின்னால் சாய்த்தாய் என்று அவர் கூற இரு பெண்களும் நடுவானில் சண்டை போட்டனர். இதை பார்த்த விமானி விமானத்தை ஜாக்சன்வில்லுக்கு திசை திருப்பி தரையிறக்கினார்.
முன்னதாக கடந்த வாரம் மயாமியில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்ற விமானம் பாஸ்டனுக்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது. காரணம் 61 வயது நபர் சாய்வு இருக்கை குறித்து தனக்கு முன்னால் இருந்த பயணியுடன் சண்டை போட்டது தான். நீ ஏன் இருக்கையை சாய்த்தாய் என் முழங்காலில் இடித்து வலிக்கிறது என்று அந்த முதியவர் சண்டை போட்டார்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்காவின் நியூவார்க் நகரில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டென்வருக்கு கிளம்பியது. அப்போது சாய்வு இருக்கை பிரச்சனையால் இரண்டு பயணிகள் சண்டை போட்டதால் விமானம் சிகாகோவுக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சுமார் 10 நாட்களில் இருக்கை பிரச்சனையால் மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.