அமெரிக்காவின் முயற்சி இந்த முறையும் தோல்வி! போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மழுப்பல்!
டெல் அவிவ்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், சமீபத்தில் தனது இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த பயணத்தின் போது, போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் கறாராக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி ஏதும் நடக்காததால், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் ரஷ்யாவும், சீனாவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க தொடங்கின. நாளடைவில் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கும், அதன் தோழமை நாடான அமெரிக்காவுக்கும் எதிராக பேச தொடங்கின. எனவே, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இதன் விளைவாக பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது. இப்படி இருக்கும்போதுதான் போரை தீவிரப்படுத்துவதை போன்ற சம்பவம் ஒன்று நடந்தது.
அதாவது ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்த தாக்குதலை தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஏற்கெனவே போர் காரணமாக அமெரிக்காவின் பெயர் ரொம்ப டேமேஜ் ஆகியியுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் தலைவர் படுகொலையை காரணமாக வைத்து, சமாதானத்திற்கு வரமுடியாது என்று ஹமாஸ் கூறியிருப்பது போரை மேலும் தீவிரமடைய வைத்திருக்கிறது. இதனால் பாலஸ்தீன மக்கள்தான் மேலும் அதிகமாக கொல்லப்படுவார்கள். இது அமெரிக்காவுக்கு கூடுதல் தலைவலி.
எனவே இதனை தனிக்க தற்போது அமெரிக்கா மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதாவது கடந்த 17ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது, இஸ்ரேலின் சட்டையை பிடித்து, உடனடியாக போரை நிறுத்த போகிறாயா? இல்லையா? என அமெரிக்கா கேள்வி கேட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆண்டனி பிளிங்கன் பயணத்தை மேற்கத்திய ஊடகங்களும் இதே பாணியில் சித்தரித்து செய்தியை வெளியிட்டிருந்தன.
ஆனால் அமெரிக்கா-கத்தார்-இஸ்ரேல்-எகிப்து பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பு பங்கேற்கவில்லை. காரணம், போரை நிறுத்த வேண்டும் என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று, இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை லிஸ்ட் போட்டிருக்கிறது. எப்படியாவது போரை நிறுத்தி, அதற்கு நான்தான் காரணம் என்கிற பெயரை வாங்கிவிட அமெரிக்கா முயன்று கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலின் இந்த புதிய நிபந்தனைகள் அமெரிக்காவை கடுப்பேற்றிருக்கிறது.
நிபந்தனைகளை தளர்த்த ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இஸ்ரேல் இறங்கிவர மறுத்துவிட்டது. எனவே பிளிங்கன் நேற்றுடன் தனது இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டார். ஆக இந்த முறையும் போர் நிறுத்தம் சாத்தியமில்லாமல் போயுள்ளது.












Click it and Unblock the Notifications