இரவோடு இரவாக வந்த அறிவிப்பு.. வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு.. அங்கே அடுத்து என்ன நடக்கும்?
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அங்குத் தொடரும் வன்முறையால் அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதற்கிடையே வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் அதிர் ஷஹாபுதீன் அறிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் வங்கதேசத்தில் பல அரசியல் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்கள் என்பது மெல்ல அந்நாட்டின் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களாக மாறின. ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

போராட்டங்களை ஒடுக்க வங்கதேச அரசு எடுத்த எந்தவொரு நடவடிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை. மாணவர் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுக்க பரவிய நிலையில், ஹசீனா வேறு வழியில்லாமல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைப்பு: வங்கதேசத்தில் இருந்து ஹசீனா வெளியேறியுள்ள நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தான் அங்கே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய எம்பிகள் தேர்வாகி இருந்தனர். இதற்கிடையே ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இப்போது அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் போராட்டம் கையை மீறிச் சென்ற நிலையில், அழுத்தம் அதிகரித்ததால் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். அவரது விமானம் டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கியது. அவர் தற்போது விமானப்படைத் தளத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார். அவர் அங்கேயே இருப்பாரா அல்லது லண்டனில் தஞ்சம் புக இருக்கிறாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஆலோசனைக் கூட்டம்: இதற்கிடையே திங்கள்கிழமை இரவு வங்கதேசத்தில் இப்போது இடைக்கால ஆட்சியை அமைத்துள்ள ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் விடுதலை: இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிபர் ஷஹாபுதீன் அறிவித்துள்ளார். மேலும், வங்கதேச முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
ஹசீனாவை தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சித்து வந்த கலிதா ஜியா ஊழல் வழக்கில் கடந்த 2018இல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த78 வயதான கலீதாவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அவரையும் விடுவிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஷஹாபுதீன் அறிவித்துள்ளார்.
ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய உடனேயே பல மாற்றங்கள் அங்கே நடக்கத் தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் தான் வங்கதேசம் எதை நோக்கிச் செல்கிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications