அசாத் அதிரடி முடிவு.. சிரிய நாடாளுமன்ற, அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம்!
டமாஸ்கஸ்: சிரியாவில் தலை தூக்கியுள்ள உள்நாட்டு தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் அசாத் முடிவு செய்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷீர் அல்-அசாத் தலைமையிலான அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த கடந்த நான்காண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து போர் நடைபெறுவதால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்
உள்நாட்டு போருக்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியம் அங்கு பெருகியுள்ளது. சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்நுஸ்ரா அமைப்பினரை ஒடுக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா ஆதரவளிக்கும் கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா, ஜோர்டான் ஆகியவை இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ரஷ்யா நடத்தி வரும் விமானத் தாக்குதல்களை பயன்படுத்தி சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறி கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் வசம் உள்ள நகரங்களை மீட்பதில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இதனிடையே சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதியான ஜோபர் நகரம் கிளர்ச்சி குழு வசம் உள்ளது. இந்த நகரை மீட்பதற்காக ரஷ்யா விமானங்கள் வான்வழித் தாக்குதலை நடத்த சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறுகிறது.
இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சிரியாவில் நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை நடத்த அதிபர் அசாத் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை ரஷ்ய எம்.பி. அலெக்சாண்டர் யுஷ்சென்கோ தெரிவித்துள்ளார். டமாஸ்கசில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டால் சிரியாவில் அதிபர் அசாத் பொதுத்தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளார். அதில், மீண்டும் போட்டியிடவும் அவர் தயாராக இருக்கிறார். இந்த தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும்'என வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications