விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதித் திட்டம்.. ஆஸ்திரேலியாவில் பரபரப்பு
சிட்னி: விமானத்தை சுட்டு வீழ்த்தும் சதித்தி ட்டத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய போலீஸார் அது தொடர்பாக 4 பேரைக் கைது செய்து அந்தத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர்.
சிட்னி புறநகரான சர்ரி ஹில்ஸ் புறநகர்ப் பகுதியில் இந்த கைதுச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டு வந்ததும், அதுதொடர்பான கருவிகள் இருப்பதையும் போலீஸார் கண்டறிந்து அவற்றை முறியடித்துள்ளதாக பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கும் ஏகப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சர்ரி ஹில்ஸ் தவிர லகேம்பா, வைலி பார்க், பன்ச்பவுல் ஆகிய சிட்னி புறநகர்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர்களில் ஒருவரின் மனைவி கூறுகையில், தனது கணவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கால்வின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications